தமிழ்நாடு

“மழைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் நெல் கொள்முதல் செய்திட வேண்டும்!” : முதலமைச்சர் அறிவுறுத்தல்!

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் நலன் காத்திட நெல் கொள்முதல், உரங்கள் இருப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

“மழைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் நெல் கொள்முதல் செய்திட வேண்டும்!” : முதலமைச்சர் அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(2.10.2025) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் ஆகிய டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு, நகர்வு, அரவை மற்றும் உரங்கள் இருப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய காலத்தில் திறந்த காரணத்தினாலும், கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாலும், பருவ மழையினால் விவசாயிகளுக்கு தண்ணீர் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்கப்பெற்றதாலும், இடுபொருள் மானியம், விவசாயக் கடன்கள் ஆகியவற்றினால் கடந்த ஆண்டைவிட அதிக அளவில் விளைச்சலும், மகசூலும் விவசாய பெருங்குடிமக்களுக்கு டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் கிடைத்துள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன், மழைக்காலங்களில் விவசாயிகள் பாடுபட்டு உற்பத்தி செய்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்குடன் அதிக அளவில் நெல் சேமிப்புக் கிடங்குகளை கட்டிவருகிறது.

அந்தவகையில், இதுவரை நெல் மணிகளைப் பாதுகாத்திட 4.03 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல்சேமிப்புத் தளங்கள் கட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு சாதனையாக 47.99 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024-2025 கொள்முதல் பருவத்தில் செப்டம்பர் மாதத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் ஆகிய ஐந்து டெல்டா மாவட்டங்களில் 1.27 இலட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த மாவட்டங்களில் மட்டும் 3.20 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

“மழைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் நெல் கொள்முதல் செய்திட வேண்டும்!” : முதலமைச்சர் அறிவுறுத்தல்!

இவ்வாறு இந்த ஆண்டு உற்பத்தி பெருமளவு அதிகரித்துள்ள காரணத்தினால் விவசாயிகளிடமிருந்து எவ்வித தாமதமுமின்றி நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் அதேசமயம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் இக்கூட்டம் நடத்தப்பட்டது.

முதலமைச்சர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசுச் செயலாளர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை, இருப்பு, சேமிப்பு, நகர்வு, கிடங்கு வசதி மற்றும் உரங்கள் இருப்பு ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் கொள்முதல் பணிகள், அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.

கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகள் மட்டுமின்றி, வேளாண் துறையின் கீழ் வரும், வேளாண் விற்பனைத் துறை சேமிப்புக் கிடங்குகளையும், வேளாண் உற்பத்தித் துறையில் உள்ள ஒரு இலட்சம் மெட்ரிக் டன் கிடங்கு வசதியினையும்;

வேறு பல துறைகளின் கிடங்குகளையும் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக்கொள்ளவும், கொள்முதல் செய்யப்படும் நெல் உடனடியாக அரவை ஆலைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்திடவும், வேறு மாவட்டங்களிலிருந்து கூடுதல் அலுவலர்களை அனுப்பி பணிகளை மேற்பார்வையிடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

நெல் கொள்முதல் நிலையங்களில் 2025 - 26 ஆம் ஆண்டில் மிக அதிகமாக நெல் கொள்முதல் எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து இடங்களிலும் போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் இருப்பதையும், விவசாயிகளுக்கு எவ்விதச் சிரமமும் இன்றி கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் உறுதிப்படுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், டெல்டா மாவட்டங்களின் நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் கிடங்குகளிலிருந்து கூடுதல் இரயில்வே வேகன்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு விரைந்து நெல் மூட்டைகளை அனுப்பிடவும் அறிவுறுத்தினார்.

மழைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் நெல் கொள்முதலைச் சிறப்பாகச் செய்திடவும், உரத் தேவையை நிறைவு செய்திடவும், நெல் சேமிப்பு மற்றும் நகர்வைத் துரிதப்படுத்தவும், டெல்டா மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories