’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்ட விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும், சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாக நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது.
தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருங்கமான திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், விளையாட்டுச் சாதனையாளர்கள், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் மற்றும் அரசுப் பள்ளிகளிலிருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு சென்ற சாதனையாளர்கள் ஆகிய பகுதிகளாக இவ்விழா நடைபெற்றது.
இதன் ஒவ்வொரு பகுதியிலும் அரசின் திட்டம் மூலம் பயனடைந்த மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர், புதுமைப் பெண் திட்டத்தால் பயனடைந்த மாணவர்களின் குரல்களை கேட்டபோது அரங்கமே கண்ணீரில் நெகிழ்ந்தது.
இவ்விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "இந்த உலகத்திலேயே கல்விதான் மிகப்பெரிய செல்வம். முதல் தலைமுறையில் ஒருவர் படித்தால் அடுத்த தலைமுறையில் எவ்வளவு பெரிய மாற்றம் வரும் என்பதை எனது குடும்பத்தில் நான் பார்த்திருக்கிறேன்.
சினிமாத் துறை ஒரு சவாலான துறை. இதில் தொடர்ந்து நீடிப்பது சிரமமானது. ஒரு வேளை இங்கு இருந்து நான் வெளியே சென்று விட்டால், என்னிடம் 2 Degree இருக்கிறது. என்னால் எந்த வேலையும் செய்து பிழைத்துக் கொள்ள முடியும். என்னிடம் கல்வி இருப்பதால்தான் நான் தைரியமாக இருக்கிறேன்.
இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவை இங்கு பேசியவர்கள் மூலம், பெரிய நம்பிக்கையை எனக்கு கொடுத்துள்ளது. பல திட்டங்கள் மூலம் நமது மாணவர்களின் வாழ்க்கையை மாற்றி கொண்டு இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றிகள்.
வாழ்க்கையில் நீங்க ஜெயிக்கனுமா?, சம்பாதிக்கனுமா?. வீடு வாங்கனுமா?, அம்மா அப்பாவ நல்லா பாத்துக்கனுமா, வாழ்க்கையில நல்லா இருக்கனுமா? இது எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு படிப்புதான். நீங்க Mark-க்காக மட்டும் அல்ல வாழ்க்கைக்காகவும் படிங்க. படிப்புதான் முக்கியம்" என தெரிவித்துள்ளார்.