தமிழ்நாடு

"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !

"வரும் தேர்தலில் 3-ம்  இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி"  - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இருந்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் ஊர்வலமாக வந்து அரசு மருத்துவமனை அருகே உள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் குமார் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் மற்றும் மாநகராட்சி மேயர் இளமதி துணை மேயர் ராஜப்பா ஒன்றிய செயலாளர் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளரை சந்தித்த அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது, “பேரறிஞர்அண்ணா பிறந்தநாளுக்கு எல்லோருக்கும் வாழ்த்துகள். இந்தியாவில் தலைசிறந்த முதலமைச்சராக தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். 2026 ஆம் ஆண்டு மீண்டும் 2வது முறையாக ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்.

முதலமைச்சர் ஸ்டாலினை எந்த விமர்சனமும் தொட்டுப் பார்க்க முடியாது. கடந்த நான்காண்டு காலத்தில் எல்லா தரப்பு மக்கள், வியாபாரிகள், தொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் எண்ணற்ற திட்டங்களை தந்து தொழில்துறையில் மட்டுமல்லாமல், எல்லா துறையிலும் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக கொண்டு வந்துள்ளார்.

"வரும் தேர்தலில் 3-ம்  இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி"  - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !

விஜய் தற்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதிமுகவை பொறுத்தவரையில் பழனிசாமி 2-வது இடத்திற்கு வரவேண்டும் என முயற்சி செய்கிறார். 3-வது இடத்திற்கு வர வேண்டுமென சீமானும், விஜயும் முயற்சி செய்கின்றனர். இவர்களால் ஒரு இடத்தை கூட தமிழ்நாட்டில் பிடிக்க முடியாது. மக்கள் மனதில் முதலமைச்சர் ஸ்டாலின் இடம் பிடித்துள்ளார். 200 தொகுதி வெல்ல வேண்டும் என்று முதல்வர் கூறினார். ஆனால் திமுகவிற்கு 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி கிடைக்கும்.

விஜய் இதுவரை தேர்தல் களத்தை சந்திக்கவில்லை. மூன்று தேர்தல் களத்தை சீமான் சந்தித்துள்ளார். ஆனால் ஆட்சி மாற்றம் வர வேண்டும் எனக் கூறுகிறார். இந்த தேர்தலை பொறுத்தவரையில் சீமானுக்கும் - விஜய்க்கும் தான் போட்டி. எங்களுடன் விஜய்க்கு போட்டி இல்லை. முதலமைச்சருக்கு போட்டி யாரும் இல்லை. முதலமைச்சர் நட்சத்திரமாக உள்ளார். மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்றால் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பயன் பெறும் எண்ணற்ற திட்டங்களை திமுக கொடுத்துள்ளது. அனைத்து தரப்பு வாக்குகளும் மொத்தமாக திமுகவிற்கு குவியும்.

அவர்கள் யாரும் 20,000 முதல் 25,000 ஓட்டுகளை தாண்ட மாட்டார்கள். அதிமுக 5000 ஓட்டு அதிகமாக வாங்குவார்கள். திமுக பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். விஜய் பற்றி கவலைப்படவும் இல்லை, சிந்திக்க தேவையும் இல்லை. மக்கள் சினிமா பார்த்துவிட்டு வெளியில் சென்றால் மறந்து விடுவார்கள். பொழுது போக்கிற்காக மட்டுமே விஜயை பார்க்கிறார்கள். விஜயை சினிமாவில் பார்த்தோம், தற்போது நேரில் பார்ப்போம் என மக்கள் செல்கின்றனர்.

"வரும் தேர்தலில் 3-ம்  இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி"  - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !

கொடுத்த திட்டங்கள் குறித்து நேற்று முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார். எத்தனை திட்டங்கள் செய்துள்ளோம், சொல்லாமல் செய்த திட்டங்கள் அனைத்தையும் வெளியிட்டுள்ளார். 10 நாட்களில் விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கொடுக்க உள்ளோம். திட்டங்களைப் பற்றி பேசினால் எங்களிடம் எல்லோரும் டெபாசிட் இழந்து விடுவார்கள்.

சொல்வது எளிது செய்வது அரிது சொல்வதை மற்றும் சொல்லாததையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார். விஜய்க்கு வந்த கூட்டத்தை விட முதலமைச்சர் வரும்பொழுது அதைவிட அதிக கூட்டம் வரும். யாரோ கூறி கட்சி ஆரம்பித்துள்ளார் விஜய்.

77-ல் கம்யூனிஸ்ட் கட்சி எங்களை விட்டு சென்றதால், திமுக 50 இடங்கள் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமைந்தது. கம்யூனிஸ்டு கட்சி எங்களை விட்டு சென்றதால் தான் எம்.ஜி.ஆர். ஆட்சி வந்தது. இல்லை என்றால் எம்.ஜி.ஆர் ஆட்சி வந்திருக்காது. விஜய் அரசியல் அரிச்சுவடி தெரியாது. ஊருக்கு சென்றால் எல்லோரும் வருவார்கள். ஆயிரம் பேர் வாக்களித்தால் பெட்டி நிறையுமா? விஜயை பார்க்க வருபவர்கள் எல்லாம் ஓட்டாக மாறாது.

திமுக தொண்டன் டீ குடிக்காமல் வேலை பார்ப்பார்கள் 2026 தேர்தலில் அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்கும். 200 தொகுதி கிடையாது கண்டிப்பாக 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். விஜய் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்ல சொல்லுங்கள். குறை சொல்வதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். குறை சொல்வது எளிது, செயலாற்றுவதுதான் கடினம்.

ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்காமல் முதல்வர் பணி செய்கிறார். கலைஞரை போன்று 3 மடங்கு உழைப்பை கொடுக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தேர்தல் களத்தில் நாங்கள் ஆற்றுகின்ற பணியை அனைவரும் பார்க்கப் போகிறீர்கள். இதுவரை பெறாத மிகப்பெரிய வெற்றி வரும் தேர்தலில் திமுகவிற்கு கிடைக்கும்" என்றார்.

banner

Related Stories

Related Stories