சென்னை ராயபுரம், காசிமேடு பகுதியைச் சேர்ந்த பெயிண்டராக பணியாற்றி வரும் ராமச்சந்திரன் என்பவரின் மனைவி கிளாரா (வயது 39) அவர்கள், திருவான்மியூர் பகுதி 180 வது வார்டில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதியினருக்கு செல்வி ரா.சூசைமேரி (வயது 18), செல்வி ரா.சுவாதி (வயது 13), செல்வி ரா.நிக்கிதாஸ்ரீ (வயது 10) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
துப்புரவு பணியாளர் கிளாரா திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான, மருந்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டபோது கீழே கிடந்த 1 பவுன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்து, இன்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்த செய்தியை அறிந்து துப்புரவு பணியாளர் கிளாரா அவர்களை குடும்பத்துடன் தனது முகாம் அலுவலகத்திற்கு அழைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், துப்புரவு பணியாளர் கிளாரா அவர்களின் நேர்மையை பாராட்டினார். மேலும் புத்தாடையும், தி.மு.க இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் வெகுமதியும் வழங்கி அவரது நேர்மையான பணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
துப்புரவு பணியாளர் கிளாரா அவர்களின் குடும்பத்தினருடன் உரையாடிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், லண்டனில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தன்னை அழைத்து, பாராட்டு தெரிவிக்குமாறு தொலைபேசியில் தெரிவித்தார் என்றும், தமிழ்நாடு திரும்பியதும், உங்களை நேரில் சந்திக்க ஆர்வமாக இருப்பதாகவும், கிளாரா குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.