சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் 15.08.2025 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
1.காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள ஆர்பிஐ (RBI) சுரங்கப்பாதை வரையிலான சாலைகள் மற்றும் கொடி மரச்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும்.
2.காமராஜர் சாலையில் ராஜாஜி சாலை வழியாக பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் வாலாஜா சாலையில் இடதுபுறம் திரும்பி அண்ணா சாலையில் இணைந்து, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, இராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எஃப்.எஸ் (NFS) சாலை வழியாக பாரிஸ் கார்னரை அடையலாம். அதேபோல், அண்ணா சாலையிலிருந்து பாரிஸ் கார்னரை நோக்கி வரும் வாகனங்கள் மேலே உள்ள அதே பாதையை பயன்படுத்தலாம்.
3.ராஜாஜி சாலையில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், பாரிஸ் கார்னர், என்.எஃப்.எஸ் சாலை, இராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக அண்ணா சிலையில் இடதுபுறம் திரும்பி வாலாஜா சாலை நோக்கி சென்று காமராஜர் சாலையை அடையலாம்.
பாஸ்கள் உள்ள வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் /நிறுத்தங்கள்:
4.சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ்கள் வழங்கப்பட்ட வாகனங்கள், காலை 08.30 மணிக்கு முன் சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ்களுடன் வரும் வாகனங்கள், ராஜாஜி சாலையில் சென்று தலைமைச் செயலக நுழைவாயிலின் முன் விருந்தினர் இறங்கிய பின், வாகனமானது தலைமைச் செயலகத்திற்குள் நிறுத்த அனுமதிக்கப்படும்.
காலை 08.30 மணிக்குப் பிறகு வரும் அழைப்பாளர் வாகனங்கள் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சிலை, அண்ணா சாலை, வாலாஜா பாயிண்ட், முத்துசாமி பாயிண்ட், இராஜா அண்ணாமலை மன்றம், என்.எஃப்.எஸ் சாலை, பாரிஸ் கார்னர் மற்றும் ஆர்.பி.ஐ (RBI) சுரங்கப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டு, தலைமைச் செயலக வெளிவாயில் முன் விருந்தினர் இறங்கிய பின், பொதுப்பணித்துறை மைதானத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும்.
5. காமராஜர் சாலையில் வரும் அழைப்பாளர்கள் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிற பாஸ்கள் வழங்கப்பட்ட வாகனங்கள் போர் நினைவுச்சின்னம், கொடி மரச்சாலை, வாலாஜா பாயிண்ட், முத்துசாமி சாலை, NFS சாலை, பாரிஸ் கார்னர் மற்றும் ஆர்.பி.ஐ (RBI) சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலகத்தின் வெளிப்புற வாயிலை அடைய வேண்டும்.
அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சிலை, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், NFS சாலை, பாரிஸ் கார்னர் மற்றும் ஆர்.பி.ஐ (RBI) சுரங்கப்பாதை வழியாகச் சென்று தலைமைச் செயலக வெளிவாயிலில் இறங்க வேண்டும். நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிற பாஸ்கள் வழங்கப்பட்ட அனைத்து வாகனங்களும் தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.