பள்ளி போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையை உறுதி செய்யும் சீரான ஒழுங்குமுறை சட்டங்கள் இல்லை என்பது குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா மாநிலங்கலவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வாகனங்களின் தரநிலை, ஓட்டுநர் தகுதிகள் மற்றும் பயணிகள் வரம்புகள் குறித்த வரம்புகளை பள்ளிகள் சரியாக பயன்படுத்துகின்றனவா? அதற்கான ஆய்வுகளை ஒன்றிய அரசு முறையாக செய்கிறதா என அவர் கேட்டுள்ளார்.
பள்ளி பகுதிகளில் வேகத் தடைகள், அறிவிப்பு பலகைகளை நிறுவுதல் உள்ளிட்ட விரிவான பள்ளி பகுதி பாதுகாப்பு தரநிலைகளை அரசிட இருக்கும் திட்டங்கள் என்ன எனவும் அவர் கேட்டுள்ளார்.
சரக்கு இரயில்களின் வேகத்தை அதிகப்படுத்த நடவடிக்கை
சரக்கு இரயில்கள் மற்றும் புறநகர் பயணிகள் இரயில்களின் வேகத்தை அதிகப்படுத்தும் மிஷன் ரப்தார் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்கள் குறித்து வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களுடன் ஒப்பிடும்போது, இத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு பாகுபாடுகள் இல்லாத முறையான ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
சென்னை-மதுரை, சென்னை-கோவை மற்றும் திருச்சிராப்பள்ளி-ராமேஸ்வரம் போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நெரிசலான வழித்தடங்களில் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் ஒன்றிய அமைச்சகம் இப்பணியை வேகமாக முடிக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
தொழில்நுட்ப பூங்காக்களை இரண்டாம் கட்ட நகரங்களுக்கு மாற்றுக!
டிஜிட்டல் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கேற்ப மென்பொருள் தொழிநுட்ப பூங்காங்கள் தங்களை தகவமைத்து கொள்வது குறித்து திமுக சேலம் மக்களவை உறுப்பினர் செல்வகணபதி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மென்பொருள் தொழிநுட்ப பூங்காங்கள் தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் அவை சார்ந்த சேவைகளை இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களுக்கு மாற்றுவதை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கும் அவர் இதற்காக அரசு சுமார் 17 லட்சம் சதுர அடி இடத்தை அரசு ஒதுக்கியுள்ளது என்பது குறித்த தகவல்களையும் கேட்டுள்ளார். மேலும் நாடு முழுவதும் ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள 24 தொழில்முனைவோர் மையங்களை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.