ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களையும், நிதியையும் ஒதுக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக வஞ்சித்து வருகிறது. 100 நாள் வேலை திட்டம் முதல் மாணவர்களின் கல்விக்கான நிதி வரை பல்வேறு திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு தர வேண்டியை நிதியை வழங்காமல் இருக்கிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,சமக்ரா சிக்ஷா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
ஆனால் ஒன்றிய அரசு, PM SHRI பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக அமல்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டால் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என மிரட்டி வருகிறது.
ஆனால் ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு அஞ்சாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீங்கள் ரூ.2 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கமுடியாது என துணிச்சலுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான நிலுவையிலுள்ள சமக்ரா சிக்ஷா நிதியையும், 2025-26 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை நிதியினையும் உடனடியாக வழங்கிட வலியுறுத்தி மீண்டும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.