திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் 'அன்னம் தரும் அமுத கரங்கள்' நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 155-வது நாளாக இன்று திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 'அன்னம் தரும் அமுத கரங்கள்' நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், திமுக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதிகளில் ஏழை,எளிய பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்ட திரு.வி.க. நகர் வடக்கு பகுதி, 72 மற்றும் 72 அ வட்டத்திற்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே சேகர்பாபு பேசியதாவது :
"கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே, அதிமுக-வின் பத்தாண்டு கால ஆட்சியில் எங்கே போனது அந்த வாக்குறுதி. முதல்வர் குறித்து ஒருமையில் பேசுவது எடப்பாடி பழனிசாமியின் தரத்தைக் காட்டுகிறது. அடிமை இயக்கம் யார் நடத்துகிறார்கள் என அவர்களுக்கும் புரியும், நாட்டு மக்களுக்கும் தெரியும். பழனிசாமியின் சுற்றுப்பயணம் ஒரு புளிச்ச பயணம்; தீர்வு இல்லாத பயணம்.
'நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக' எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் என்ற பெயரிலே மாற்றி மாற்றி பேசி வருகிறார். நடந்த அத்தனை தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே பழனிசாமிக்கும், பாஜகவுக்கும் பரிசளித்தவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதேபோல் 2026 தேர்தலிலும் பழனிசாமிக்கு தோல்வியை திமுக பரிசளிக்கும்.
மக்களோடு மக்களாக பயணம் செய்யும் தலைவராக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளார். அவர் முன்னெடுத்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் மூலம் மக்கள் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது.
சென்னை திரு.வி.க. நகரில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மட்டும் பொதுமக்களிடமிருந்து 2,400 மனுக்கள் பெறப்பட்டு அங்கேயே 600 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழை ஆன்மீகம் வளர்த்தது, ஆன்மீகத்தை தமிழ் வளர்த்தது. தமிழும் ஆன்மீகமும் ஒன்றுதான். இது தெரியாமல் சிலர் பிதற்றிக்கொண்டு உள்ளார்கள்." என்றார்.