திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றியக்கழகம் சார்பில் பாரிவாக்கத்தில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், கழகத்தின் வேர்களான மூத்த உடன்பிறப்புகளுக்கு பொற்கிழி, மகளிருக்கு தையல் மெஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கழக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்நிகழ்வில், 100க்கும் மேற்பட்ட கழக மூத்த முன்னோடிகள் கலந்துகொண்டிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் 5 முறை முதலமைச்சரானதற்கும், தற்போது நம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதற்கும், கழகத்திற்காக உழைத்த மூத்த முன்னோடிகள்தான் முதன்மை காரணம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
அவர்களின் உழைப்பால், இன்று ஆட்சி வகிக்கும் திராவிட மாடல் அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் நாள்தோறும் சுமார் 18 லட்சம் பள்ளி குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். இதனால், பள்ளி வரும் குழந்தைகளுக்கு முதலில் தரமான காலை உணவு, பிறகு தரமான கல்வி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அனைவருக்கும் பார்த்து பார்த்து திட்டங்களை வகுக்கும் திராவிட மாடலின் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ளாமல், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை உண்டாக்கி வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
நிதியுரிமை, கல்வியுரிமை வரிசையில் இப்போது மொழி உரிமையையும் பறிக்க ஒன்றிய பா.ஜ.க.வினர் திட்டமிட்டு வருகிறார்கள். கடந்த கல்வியாண்டில், தமிழ்நாடு கல்விக்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் நிதி கூட ஒதுக்கவில்லை.
இதனை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்கள் நம் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து, தி.மு.க கூட்டணிக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதனால், நம் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழகத் தலைவராக பொறுப்பேற்றது முதல் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றியடைந்துள்ளார். இந்த வெற்றிப்பாதை 2026-லும் தொடர இருக்கிறது” என்றார்.