தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், மருதக்குடி கிராமத்தில் உள்ள பிள்ளையார் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், மருதக்குடி கிராமம், திருவேங்கடஉடையான்பட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் ஜஸ்வந்த் (வயது 8), மாதவன் (வயது 10), பாலமுருகன் (வயது 10) ஆகிய மூவரும் நேற்று (11.7.2025) மாலை சுமார் 4.30 மணியளவில் பள்ளிக்குச் சென்றுவிட்டு மருதக்குடி கிராமத்தில் உள்ள ஊரணிகுளம் என்கிற பிள்ளையார் குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இச்சம்பவத்தில், உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது பெற்றோர்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.