சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு முழுவதும் 33,312 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 3,76,443 உறுப்பினர்களுக்கு 3,134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்குவதை துவக்கி வைக்கும் வகையில், சென்னையில் செயல்படும் 1,401 சுய உதவிக் குழுக்களின் 14,083 உறுப்பினர்களுக்கு 123.65 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடன் இணைப்புகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் செயல்பட்டு வரும் 20 சுய உதவிக் குழுக்களுக்கு விருது மற்றும் தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், 5 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு விருது மற்றும் தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், 5 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு கூட்டமைப்புகளுக்கு விருது மற்றும் தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், 3 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு விருது மற்றும் தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரெட்டியார் சத்திரம் வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சேலம் மேற்கு சூரமங்கலம் நகர அளவிலான கூட்டமைப்பிற்கு விருது மற்றும் தலா ரூ.5.00 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் என மொத்தம் 35 சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு 2024-2025 ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுகள் மற்றும் விருதுத் தொகையாக மொத்தம் 59.00 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து, 9.4.2025 அன்று சென்னை, நேரு பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் பன்முகக் கலாச்சாரப் போட்டிகளில் வெற்றி பெற்ற 20 சுய உதவிக் குழுக்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகையாக மொத்தம் ரூ.2.75 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
இவ்விழாவில், சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களுக்காக புதியதாக வடிவமைக்கப்பட்ட ”மதி இலட்சினையை” (Logo) வெளியிட்டு, சுய உதவிக் குழுக்களால் தரமான முறையில் தயாரிக்கப்பட்ட ‘செக்கு கடலை எண்ணெய்யை’ பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.
முன்னதாக, இவ்விழாவினையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில், காட்சிப் படுத்தப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களைப் பார்வையிட்ட மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார்.