ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கடந்த மாதம் 22-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பின்னர் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதால் இருநாட்டு எல்லைகளிலும் போர் பதற்றம் சூழ்ந்தது. இந்த போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில் திடீரென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்தார். இதன் பிறகுதான் ஒன்றிய அரசே தாக்குதல் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாக தன்னால்தான் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது என கூறியுள்ளார். தற்போது கூட 11 ஆவது முறையாக "இந்தியா - பாகிஸ்தான் மோதலை நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம். இல்லை என்றால் அது அணுசக்தி பேரழிவாக முடிந்திருக்கும்.
ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு அணு ஆயுதங்களை பயன்படுத்தும் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் நாடுகளுடன் எங்களால் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது என கூறினோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏன் இப்போது வரை பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,”இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுத மோதலை நான்தான் தடுத்ததாக 21 நாட்களில் 11 ஆவது முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
ஆனால் அவரது நண்பர் நரேந்திர மோடி இதனை மவுனத்துடன் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். பிரதமர் ஏன் பேசவில்லை?. மோடி பொய் சொல்வதுபோல் ட்ரம்ப் பொய் சொல்கிறாரா? அல்லது அவர் 50% உண்மை பேசுகிறாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.