உலகத்திற்கே மரண பீதியை காட்டிய கொரோனா என்ற வார்த்தையை நாம் எல்லோரும் மறந்தே இருப்போம். இந்த கொரோனா துயரங்களில் இருந்து மீண்டும் பழையபடி வாழ்க்கை சென்று கொண்டு இருக்கும் நேரத்தில் மீண்டும் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,710 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இருந்தும் 2019 ஆம் ஆண்டு இருந்த சூழல்தற்போது இல்லை.
இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” கொரோனா பரவலால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு என்று தனி வார்டு உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைப்பிடித்தால் போதுமானது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது. ஆனால் இது கட்டாயம் இல்லை” என தெரிவித்துள்ளார்.