பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கும் இருந்து வந்த உரசல்போக்கு புத்தாண்டு அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. மேடையிலேயே இருவரும் எதிர்த்து பேசிக் கொண்டது அக்கட்சி தொண்டர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
”நான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்க வேண்டும். இல்லை என்றால் கட்சியை விட்டு போங்க" என ராமதாஸ் ஆவேசமாக கூறினார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அன்புமணி கையில் இருந்த மைக்கை தூக்கி எறிந்தார். ’பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளேன். அங்கே என்னை வந்து பார்க்கலாம்’ என கூறி அவரது செல்போன் எண்ணை மேடையிலேயே கூறினார் அன்புமணி. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை அதிரடியாக நீக்கினார் ராமதாஸ். பின்னர் ராமதாஸ் தலைமையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தையும் அன்புமணி புறக்கணித்து வந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே நடந்து வரும் மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியதே தவறு என செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.
தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், "அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியதே தவறு. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி நடந்து கொண்டது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேடை நாகரீகமும், சபை நாகரீகமும் இல்லாமல் செயல்பட்டது யார்?. அழகான ஆளுயர கண்டாடியான கட்சியை ஒரு நொடியில் உடைத்தது யார்?. கட்சியில் அன்புமணி கலக்கத்தை ஏற்படுத்தி விட்டார்.
தாய் மீது கண்ணாடி பாட்டில் எரிந்து ஆவேசமாக நடந்து கொண்டவர் அன்புமணி. தலைமை பண்பு கொஞ்சம் கூட அன்புமணிக்கு இல்லை. கட்சியின் முடிவுகளை ஏற்பது கிடையாது” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார். இப்படி ராமதாஸ் வெளிப்படையாக பல குற்றச்சாட்டுகன் முன்வைத்துள்ள நிலையில் பா.ஜ.க உடைகிறதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.