தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணித்துவிட வேண்டும் என ஒன்றிய அரசு பல வடிவங்களில் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் வசித்து வரும் பீகாரை சேர்ந்த மாணவி தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்கள் எடுத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பீகாரை சேர்ந்தவர் ஜியா குமாரி. இவரது குடும்பம் 17 ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு புலம்பெயர்ந்துள்ளது. இவரது தந்தை கட்டிட தொழிலாளி. இதனால் ஜியா குமாரி இங்கு உள்ள அரசு பள்ளியில் சேர்ந்து தனது கல்வியை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் ஜியா குமாரி 500க்கு 467 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். மேலும் தமிழ் பாடத்தில் 100க்கு 93 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
இது குறித்து மாணவி, இந்தியை விட தமிழ் கடினமாக இருந்தது. ஆனால் தமிழ் மொழியை புரிந்து கொள்ளத் தொடங்கியதும் அது எளிதாகிவிட்டது. இங்கு இருப்பவர்கள் அனைவரும் தமிழ் மொழியை மட்டுமே பேசினர். அதனால் நானும் தமிழ் மொழியை பேச, எழுத கற்றுக்கொண்டேன்.
எனது தந்தைக்கு மாத வருமானம் ரூ.10 ஆயிரம் தான் கிடைக்கும். இது எங்கள் குடும்பத்திற்கு போதமானதாக இல்லை. இருந்தாலும் அரசு பள்ளியில் மதிய உணவு, சீருடைகள், காலணிகள், புத்தகங்கள் இலவசமாக வழங்கியது எனது கல்விக்கு உதவியாக இருந்தது” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.