தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.5.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஹஜ் மானியமாக 5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வீதம் மானியத் தொகை வழங்கிடும் அடையாளமாக, 10 பயனாளிகளுக்கு ஹஜ் மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
2024-25-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, முதல் முறையாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த ஹஜ் பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஹஜ் மானியத் தொகை இந்த ஆண்டு முதல் 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தமிழ்நாடு அரசால், 14 கோடியே 12 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயணி ஒருவருக்கு ரூ.25,000/- வீதம் 5,650 பயனாளிகளுக்கு இம்மானியத் தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 10 பயனாளிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று தலா ரூ.25,000/-க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையாக வழங்கினார்.