ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இத்தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உட்பிரிவு என சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்தன.
மேலும் தப்பிச் சென்ற பயங்கரவாதிகளை பிடிக்க ஒன்றிய அரசுதீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்றும் வலியுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான கோட்லி, பாவல்பூர், முசாபராபாத் உள்ளிட்ட 9 இடங்களில் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 90 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பிரமோஸ் ஏவுகணை, ரபேல் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவின் அனைத்து எல்லைப் பகுதிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்று வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு நிற்கிறது. நமது ராணுவத்துடன், நமது தேசத்திற்காக. தமிழ்நாடு உறுதியாக நிற்கும்” என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.