தமிழிசை சௌந்தரராஜன் நீட்டாக நீட் தேர்வு நடந்ததாக சொல்கிறார். ஆனால் மாணவிகள் தாலியை கழற்றி விட்டு, தேர்வு எழுத செல்லும் கொடுமையான தேர்வாக நீட் தேர்வு இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,"நீட் நுழைவுத் தேர்வு வந்த நாள் முதல் இதில் மோசடிகளும், குளறுபடிகளும் நடந்து வருகிறது. இந்த தேர்வை உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகும் கூட மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக இருந்து வருகிறது.
நேற்று நடத்த தேர்வின் போது, தாலியை கழட்டி வைத்து விட்டு நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மாணவியிடம் வலியுறுத்தியது எல்லாம் வரலாறு காணாத அத்துமிரலாகும். இப்படி நீட் தேர்வால் மாணவர்கள் பல அழுத்தங்களை சந்திக்க நேரிடுகிறது.
ஒன்றிய அரசு கொண்டு வந்த இந்த நீட் தேர்வால் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பூர்வமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால் இதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு நிச்சயம் விலக்கு பெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசுக்கு உதவ வேண்டும். அதனை விட்டுவிட்டு அதில் அரசியல் செய்வது அவர்களது கையாலாகாத தனத்தை காட்டுகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 10% வரை உயர்த்துவது குறித்து சட்ட வல்லுனர்களின் ஆலோசனை அவசியமானது. சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” என தெரிவித்துள்ளார்.