தமிழ்நாடு

“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!

இரண்டே நாட்களிலேயே த.வெ.கவினர் தமிழ்நாட்டை தலைகுனிய வைத்துவிட்டனர்.

“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ. ஆட்சிக்கு வராததற்கு முன்பே அராஜகங்களை தொடங்கி விட்டதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி,” தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் இவ்வளவு அராஜகங்களைத் தொடங்கிவிட்டது. இது சரியா தவறா என்பதைப் பொதுமக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். 'குழந்தைகளின் பேச்சைக் கேட்டுப் பலர் வாக்களித்துள்ளனர்' என்பதை விஜய்யே ஒப்புக்கொண்டுவிட்டார்; இதன் விளைவுகளைத் தமிழ்நாட்டு மக்கள் விரைவில் உணர்வார்கள்."

"கடந்த பத்து ஆண்டுகளாகச் சீரழிந்திருந்த தமிழகப் பொருளாதாரத்தை, ஐந்தே ஆண்டுகளில் இரட்டை இலக்க வளர்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு சென்றுள்ளார். இந்தியாவிலேயே எந்த மாநிலமும் எட்டாத வளர்ச்சியை அவர் பெற்றுத் தந்துள்ளார். இதனை விஜய் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.

தற்போது நடக்கக்கூடிய சம்பவங்களே விஜய் பெற்றுள்ள வாக்கு சதவீதத்தைக் குறைத்துவிடும். ஜனநாயகத்தில் வாக்கை நிதானத்துடன்தான் அறுவடை செய்ய வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்குப் பிறகு எப்பொழுது தேர்தல் வந்தாலும் மீண்டும் திமுகதான் ஆட்சியமைக்கும்.

துவக்கமே அராஜகமாக உள்ளது; நாட்கள் செல்லச் செல்லத் தமிழ்நாடு இன்னும் எதையெல்லாம் சந்திக்கப் போகிறதோ தெரியவில்லை. சட்டசபையில் தங்களுக்குப் பதவி கிடைக்கும்போது விஜய் கட்சியினர் விசில்தான் ஊதப்போகின்றனர்.

சட்டசபைக்குள் விசிலைக் கொண்டுவரக்கூடாது என்ற விதியே உள்ளது. புனிதமான தமிழகச் சட்டமன்றம் இனி என்னென்ன கூத்துகளைச் சந்திக்கப் போகிறதோ தெரியவில்லை! 'தமிழ்நாடு தலைகுனியக் கூடாது' என்று திமுக தலைவர் கூறினார்.

ஆனால், இரண்டே நாட்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் தமிழகத்தைத் தலைகுனிய வைத்துவிட்டனர். இன்னும் தமிழ்நாட்டிற்கு எத்தனை தலைகுனிவுகள் வரப்போகின்றனவோ தெரியவில்லை." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories