தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்கள் பார்த்து பார்த்து செய்யப்பட்டு வருகிறது. சொன்னதையும் தாண்டி சொல்லாத விஷயங்களையும் செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில் இந்து அறநிலையத்துறை மிகவும் சிறப்பாக செய்து வருகிறது.
திமுக இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று வதந்தி பரப்ப பலரும் முயன்றாலும், மக்கள் அதனை தூக்கியெறிந்து திமுகவை தேர்ந்தெடுத்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், அமைச்சர் சேகர்பாபு இந்து அறநிலையத்துறை பொறுப்பை ஏற்ற பின்னர், பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.
குறிப்பாக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை 2000-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இப்படி பல நல்ல விஷயங்களை செய்து, திமுக இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தை உடைத்து வருகிறது திராவிட மாடல் அரசு.
எனினும் சில விஷ கிருமிகள் தங்கள் பொய் பிரசாரத்தை தொடர்ந்து வருகிறது வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரான்மலையில் உள்ள பழமையான முருகன் கோயில் இடித்து மசூதியாக மாற்றப்பட்டுள்ளது என்று போலி செய்து உலாவி வருகிறது.
அதாவது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரான்மலையில் 1000 ஆண்டு பழைய முருகன் கோவில் தற்போது மசூதியாக மாற்றப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் இது முற்றிலும் பொய் என்று TN Fact Check தெரிவித்துள்ளது.
இதுகுறித்து TN Fact Check வெளியிட்டுள்ள விளக்கத்தில், “சிவகங்கை மாவட்டம் பிரான்மலையின் அடிவாரத்தில் திரு.கொடுங்குன்றநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. மலை உச்சியில் வெற்றி விநாயகர் ஆலயம், பாலமுருகன் கோயில், ஷேக் அப்துல்லா அவுலிகா தர்கா ஆகியவை தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன.
தற்போதும் மலையில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். கோயிலை இடித்து மசூதி கட்டியதாக வதந்தி பரப்பப்படுகிறது என அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.