ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நடிகை ஆண்ட்ரியா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக என் மனம் பரிதவிக்கிறது. இச்சம்பவத்தை முன்வைத்து, இன்னும் அதிக கண்காணிப்பு மற்றும் அடக்குமுறைக்கு உள்ளாகவிருக்கும் காஷ்மீர் மக்களுக்காகவும் என் மனம் பரிதவிக்கிறது.
மக்களிடையே பிளவுவாதம் அதிகரித்து வரும் காலக்கட்டத்தில், குறிப்பிட்ட மதம் மற்றும் மக்கள் மீதான வெறுப்புணர்ச்சிக்கு ஆட்படாமல் இருப்பது குடிமக்களாகிய நமது கடமை. மனதில் உள்ளவற்றை நான் வெளிப்படுத்தியதில்லை. ஆனால் இதை சொல்லியாக வேண்டுமென தோன்றியதால் சொல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.