ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா, மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது.
இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தன.
வக்ஃபு மசோதா விவகாரத்தில், சட்டப்பேரவையில் வீராவேசமாக பேசிய அதிமுக, மாநிலங்களவையில் உரிய எதிர்ப்பை பதிவு செய்யாமல் நழுவியது. மாநிலங்களவையில் நள்ளிரவு 2 மணி வரை நீடித்த வக்ஃபு மசோதா மீதான விவாதத்தில் வெறும் ஒரு நிமிடம் 11 வினாடிகள் மட்டுமே பேசினார் அதிமுக எம்.பி. தம்பிதுரை.
அதுவும் வக்பு மசோதாவை நிராகரிக்க வேண்டும், அதனை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தாமல், ஒன்றிய அரசிடம் கோரிக்கைகளையே முன்வைத்தார் அதிமுகவின் தம்பிதுரை.
வக்ஃபு மசோதா விவகாரத்தில் பாஜகவை வெளிப்படையாக எதிர்க்க துணிவு இல்லாமல், பெயரளவில் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு அதிமுக நழுவியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர்.
இதேபோல், ஒன்றிய அரசின் வக்ஃபு திருத்த மசோதாவை எதிர்ப்பதாக சட்டப்பேரவையில் பாமக தெரிவித்த நிலையில், மாநிலங்களவையில், அந்த மசோதாவுக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் வகையில், வக்பு மசோதா மீதான வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
வக்ஃபு திருத்த மசோதா நாட்டை படுகுழிக்கு தள்ளக்கூடியது என கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளார் ஜி.கே.வாசன். பா.ஜ.கவின் அரசியலுக்காக, அதிமுகவும், பாமகவும், இஸ்லாமிய மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார்கள்.