தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றிய அரசு 5G தொழில்நுட்பத்தை வழங்குகிறதா? என்பது குறித்து தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், BSNL மற்றும் பிற தனியார் சேவை நிறுவனங்கள் வழங்கும் 5G சேவைகளால் மாநிலத்தில் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏதேனும் ஆய்வுகள் நடத்தப்பட்டு அறிக்கைகள் வழங்கப்பட்டிருக்கின்றனவா? என்றும் 5G சேவைகளின் கீழ் மொத்தமாக பயனடையக்கூடிய மக்கள் தொகையின் எண்ணிக்கை விவரங்களையும் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொது விநியோகத்துறையின் நடவடிக்கை என்ன?
அதேபோல், பொது விநியோக முறை மூலம் விநியோகிக்கப்படும் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை செறிவூட்டுவதற்கு பின்பற்றப்படும் தரநிலைகள் குறித்து மக்களவையில் காஞ்சிபுரம் திமுக எம்.பி-க்கள் ஜி. செல்வம், சி. என். அண்ணாதுரை ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதில், உணவுப் பொருட்களுக்கு அரசாங்கம் முறையான தர சோதனைகளை நடத்துகிறதா? அப்படியென்றால் அதன் தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விவரங்களையும் வெளியிட வேண்டும்.
தானியங்களை செறிவூட்டுவதன்மூலம் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் குறைந்ததை உறுதிசெய்ய அரசு மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்.
ஆய்வுகளின் அடிப்படையில் பொது விநியோக முறை மூலம் விநியோகிக்கப்படும் உணவின் ஊட்டச்சத்து தரத்தை மேலும் மேம்படுத்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் குறித்தும் அரசு அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.