தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் விடையளிக்கும் வகையில், வினா - விடை நேரம் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற வினா - விடை நேரத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, “தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுயமரியாதை திருமணம் பதிவு குறித்து அனைத்து சார்பதிவாளர்களுக்கும், பதிவுத்துறை பயிற்சி நிலையம் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. திருமணப் பதிவிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், பதிவுத் துறையின் இணையதளத்திலேயே செய்து கொள்ளும் வகையில், வசதிகள் செய்யப்பட்டுள்ளன.”