தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்- சண்முகத்தம்மாள் தம்பதியருக்கு 27-12-1959 அன்று மகனாக பிறந்தவர் இரா.நாறும்பூநாதன். நெல்லை மாவட்டத்தின் பிரபல எழுத்தாளரான இவர் நெல்லை சாந்திநகரில் வசித்து வந்தார்.
கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்ற நாறும்பூநாதன், ஒரு பிரபல எழுத்தாளர் ஆவார். பாரத மாநில வங்கியில் 30 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பின்னர், இலக்கியத்துறையில் ஈடுபட்டு முழுநேரமாக தமிழுக்கு தொண்டாற்றி வந்தார். மாவட்ட கலை மன்றத்தின் உதவிச் செயலாளராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றியவர்.
மேலும் இலக்கியப் பங்களிப்புகள், சமூகச் செயற்பாடுகள், பள்ளி மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவதற்கான அவரது முன்னெடுப்புகள் ஆகிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி 2022-ஆம் ஆண்டுக்கான உ.வே.சா. விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.
நண்பர்களுடன் இணைந்து தர்சனா என்ற நாடகக் குழுவை உருவாக்கி ஸருஷ்டி என்னும் நாடக குழுவுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை நடத்திய பெருமைக்குரியவர். இவருடைய முதல் நூலான 'கனவில் உதிர்ந்த பூ' என்ற நூல் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா தன்னாட்சிக் கல்லூரியில் இளங்கலை மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் வழக்கம்போல் இன்று (மார்ச் 16) காலை நடைப்பயிற்சியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், அவர் உயிரிழந்தார். தனது 66-வது வயதில் உயிரிழந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :
எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
நாறும்பூநாதன் அவர்கள் நெல்லை வட்டாரத்தை மையப்படுத்திய தனது இலக்கியப் படைப்புகளாலும், சமூகச் செயற்பாடுகளாலும் நன்கு அறியப்பட்ட முற்போக்கு இயக்க எழுத்தாளராக விளங்கியவர் ஆவார். நமது அரசு நடத்தும் பொருநை இலக்கியத் திருவிழாவிலும் அவர் மிக முக்கியப் பங்காற்றினார் என்பதை நன்றியோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
நாறும்பூநாதன் அவர்களது இலக்கியப் பங்களிப்புகள், சமூகச் செயற்பாடுகள், பள்ளி மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவதற்கான அவரது முன்னெடுப்புகள் ஆகிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி 2022-ஆம் ஆண்டுக்கான உ.வே.சா. விருதினை நமது அரசின் சார்பில் வழங்கியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மண்ணின் இலக்கிய முகங்களில் ஒருவரான எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் – இலக்கியத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.