ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மன்னார் கடல் பகுதி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்து தாக்குதல் நடத்தினர். பின்னர், 10 மீனவர்களை அவர்களின் படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் 10 பேரையும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர், 10 மீனவர்களும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீனவர்கள் கைது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி, ”மீனவர்கள் கைது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்க வேண்டும். இந்தியா - இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஒன்றிய அரசு கடந்த பல ஆண்டுகளாக அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. மீனவர்கள் கைது பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்” என தெரிவித்துள்ளார்.