டெல்லியில் நானை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய சுரேஷ் கோபி, "பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே பழங்குடியினர் நலத்துறைக்கான அமைச்சராக முடியும் என்பது நமது நாட்டின் சாபக்கேடு. இத்துறைக்குப் உயர்சாதியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் .
ஒரு பிராமணரோ அல்லது நாயுடுவோ இந்த துறைக்குப் பொறுப்பேற்றால், பழங்குடியினர் நலத்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சுரேஷ் கோபியின் இந்த பேச்சு இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாக அவரது சொந்த மாநிலமான கேரளாவில் இது மிகப் பெரிய விவகாரமாக வெடித்துள்ளது.
கேரளா சிபிஐ மாநிலச் செயலாளர் பெனாய் விஸ்வம், ”சுரேஷ் கோபி சாதிய கட்டமைப்பைப் பாதுகாக்கவே இதுபோல பேசுவதாகவும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார். வேறு பல தலைவர்களும் சுரேஷ் கோபியின் கருத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.
தனது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் உணர்ந்த அமைச்சர் சுரேஷ் கோபி தனது கருத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.