இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அதில், ”தி.மு.க ஆட்சியில் இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை . எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டிற்குள் நீட் நுழைவுத் தேர்வு வந்தது.நீட் தேர்வை ஒன்றிய அரசுதான் ரத்து செய்ய முடியும் என்பது கூட எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு தெரியாதா?" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மேலும், முந்தைய அதிமுக ஆட்சியில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதா திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட தகவலை, ஒரு ஆண்டாக இந்த அவையில் தெரிவிக்காதது ஏன்? என்றும் வினவினார்.
எதிர்க்கட்சித்தலைவர் பழனிச்சாமி ஒரு வேடம் இல்லை ஒரே நேரத்தில் 4 வேடங்களை போடுவதாகவும் முதலமைச்சர் விமர்சித்தார். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு உறுதியாக ரத்து செய்யப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்தார்.
தொடர்ந்து பதிலளித்து பேசிய முதலமைச்சர், ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அனுமதிக்கப்பட்டு இருக்கிற இடங்களில்தான், போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார். அனுமதிக்காத இடங்களில் போராட்டம் நடத்தியதால்தான், எதிர்க்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் முதலமைச்சர் கூறினார்.