நாடு முழுவதும் வசூலாகும் வரித் தொகையை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து வருகிறது. அதன்படி, 2024 டிசம்பர் மாதத்துக்கான வரி பகிர்வாக ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 30 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்திற்கு 31 ஆயிரத்து 39 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, பீகாருக்கு 17 ஆயிரத்து 403 கோடி ரூபாயும், மத்தியப்பிரதேசத்திற்கு 13 ஆயிரத்து 588 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரபிரதேசத்துக்கு 7 ஆயிரத்து 2 கோடி, அருணாச்சலபிரதேசத்துக்கு 3 ஆயிரத்து 40 கோடி, அசாமுக்கு 5 ஆயிரத்து 412 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, குஜராத்துக்கு 6 ஆயிரத்து 17 கோடி, அரியானாவுக்கு ஆயிரத்து 891 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஒன்றிய அரசுக்கு அதிக அளவு வரி வருவாயை வழங்கும் தமிழ்நாட்டுக்கு வெறும் 7 ஆயிரத்து 57 கோடி ரூபாய் மட்டுமே விடுவித்துள்ளது. இதேபோன்று, எதிர்க்கட்சிகள் ஆளும் கர்நாடகாவுக்கு 6 ஆயிரத்து 310 கோடி, கேரளாவுக்கு 3 ஆயிரத்து 330 கோடி, தெலுங்கானாவுக்கு 3 ஆயிரத்து 637 கோடி, மேற்கு வங்கத்துக்கு 13 ஆயிரத்து 17 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
வரி வருவாயை பகிர்ந்தளிப்பதில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் கண்களில் சுண்ணாம்பையும், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வெண்ணையையும் வைக்கும் ஒன்றிய அரசுக்கு நடுநிலையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.