காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 17 தேதியாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18 ஆம் தேதி நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20 ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அத்தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.