டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசின் பதவிக்காலம் பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், வாக்குப்பதிவின் போது தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என கூறினார். நாடு முழுவதும் வாக்காளர்கள் எண்ணிக்கை 99 கோடியை கடந்துள்ளதாகவும், போலியான இணையதள தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.
தொடர்ந்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வருகிற பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுத்தாக்கல் வருகிற 10 ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ.க கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு மூன்று கட்சிகளும் தங்களது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.