நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் டவுனை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினரின் சம்மதம் எதுவும் பெறாமல் கருத்தடை சாதனமான காப்பர் டி வைத்துள்ளனர் என்று இந்து முன்னணி மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் புகார் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தார். மேலும் சமூக வலைதளங்களில் அவர் கண்டன பதிவை வெளியிட்டு இருந்தார்.
அந்த கண்டன பதிவில், இந்து பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இன்றி கருத்தடை சாதனம் பொருத்தும் செயல் இந்துக்களின் ஜனத்தொகையை கருவறுக்கும் செயலாகும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவதூறான, தவறான குற்றசாட்டை பதிவு செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பெயரில் நெல்லை ஹை கிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இன்று நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த குற்றால நாதனை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.