தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியை மக்கள் புகழ்ந்து வருவதை பிடிக்காமல், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் அண்ணா பல்கலை. வளாகத்தில் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டவரை புகாரளித்த சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர் போலீசார்.
எனினும் குற்றவாளி ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று அவதூறு பரப்பியதோடு, அவரை காப்பாற்றுவதற்கு அரசு துணிவதாக பொய் பரப்பி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் குறிப்பிட்டது போல், குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு ஃபோன் காலும் வரவில்லை என்றும், குற்றவாளியிடம் மற்றொரு ஃபோன் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் போலீசார் தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும் அரசின் மீது அவதூறு பரப்ப முயற்சிக்கும் அதிமுக தற்போது போராட்டம் என்ற பெயரில் மேலும் பெண்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த செயலுக்கு தற்போது அமைச்சர் கோவி.செழியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள கண்டன பதிவு வருமாறு :
முதலமைச்சராக இருந்தபோது 13 அப்பாவி பொதுமக்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றதையே டி.வி.யைப் பார்த்து தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் திருந்தாமல் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறார்.
திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார். இன்று கூட திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டமான புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று முடித்து உயர்கல்வி பயில்வோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள்.