சென்னையில் மழை காலங்களில் அதிகப்படியான மழை பொழிவு இருக்கும் நேரங்களில் தாழ்வான பகுதிகள், சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குகிற நிலையில், அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது சென்னை மாநகராட்சி.
மழைக்காலங்களில் சாலைகளை காட்டிலும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்குவதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் சில நேரங்களில் ஆழம் தெரியாமல் நீரில் சிக்கிக்கொள்கின்றன. குறிப்பாக, மாநகர பேருந்துகள் அவ்வப்போது இதுபோல் சுரங்கப்பாதை நீரில் சிக்கி, பழுதாகி நிற்பது நடந்து வருகிறது. இதனால், மழைநீர் வடியும் வரை, அந்த சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
இதனிடையே சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, மழைக்காலங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் 12 ஒற்றை வழிப்பாதை மற்றும் 5 இரட்டை பாதை சுரங்கப்பாதைகளில் சாலை தடுப்புகளை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது.
மழைநீர் தேங்குவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், இந்த திட்டதை மழைநீர் வடிகால் துறை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் 22 உள்ள சுரங்கப்பாதைகளில் , 17 சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கும் இடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதைகளில் மழைநீர் அளவு உயரும்போது, தானாக கண்டறிய சுரங்கப்பாதை அணுகல் கட்டுப்பாட்டு அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மழைநீர் ஒரு குறிப்பிட்ட வரம்பை அடையும் போது, அந்த சுரங்கப்பாதை வழியே வாகன போக்குவரத்தை தடுக்க சம்பந்தப்பட்ட மண்டல அலுவலருக்கு அறிவுறுத்தப்படும்.
சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் செயலி, அவசரநிலைகளின் போது தடைகளை நேரடியாக அதிகாரிகள் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
இந்த தடைகள் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டு, சுரங்கப்பாதைகளில் நிகழ்நேர வெள்ள நிலைமையை கண்காணிக்கும். டிஜிட்டல் செய்தி பலகைகள், நீரில் அளவு குறித்த நிகழ்நேர தகவல் மற்றும் தமிழ், ஆங்கில குரல் அறிவிப்பு அமைப்பு போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த திட்டத்தில் அடங்கும் எனவும் மோசமான வானிலையின் போது, பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சுரங்கப்பாதையின் நிலைமை குறித்து தெரியப்படுத்தவும், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதனால், வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதைகளில் வாகனங்கள் சிக்கித் தவிக்கும் அபாயம் குறையும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.