திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிப்புரிந்துவந்த விமலா (28) க/பெ. மணிகண்டன் என்பவர் இன்று (28.11.2024) காலை 09.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர், பள்ளத்துப்பட்டியிலிருந்து பணி நிமித்தமாக புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக வந்த நான்குசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பெண் காவலர் விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
பெண் காவலர் விமலா அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். விமலா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" தெரிவித்துள்ளார்.