தமிழ்நாடு

கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !

கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு கோரிய 37,907 கோடி ரூபாய் நிதியில் 276 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட இயற்கை பேரிடர், மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு 37,907 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் ஆக மொத்தம் ரூ.276 கோடியை ஒன்றிய அரசு ஏப்ரல்-27 ஆம் தேதி விடுவித்துள்ளது.

கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !

தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில், ஒன்றிய அரசு ஒரு சதவீதத்திற்கு கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறது. ஆனால் கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி பாதிப்புக்காக மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 3498.82 கோடி ரூபாயை அளித்திருக்கிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்துதான் கர்நாடக மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. தமிழ்நாட்டை பாஜக அரசு வஞ்சித்து வருவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு சென்னை சந்தித்த பெருமழை வெள்ளம், அதன் பின்னர் உருவான வர்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல், நிவர் புயல் மற்றும் மழை வெள்ளம் ஆகியவற்றுக்கு கடந்த 9 ஆண்டில் தமிழ்நாடு அரசு ஒன்றிய பாஜக அரசிடம் கேட்ட தொகை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 655 கோடி ரூபாய் ஆகும். ஆனால் மோடி அரசு அளித்த தொகை வெறும் 5884.49 கோடி ரூபாய் மட்டுமே. தமிழ்நாடு அரசு கேட்ட தொகையில் வெறும் 4.6 சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஒன்றியத்திற்கு வரியாக கொடுக்கும் ஒரு ரூபாயில் 29 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது. ஆனால் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் 73 பைசா ஒன்றிய அரசு வழங்குகிறது.சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு திட்ட மதிப்பீட்டுத் தொகை 63 ஆயிரத்து 246 கோடி ஆகும். இதில் ஒன்றிய அரசு 50 சதவீதம் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டும். ஆனால் இதுவரை 3273 கோடி ரூபாய் அதாவது திட்ட மதிப்பில் வெறும் 5 சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.

ஆனால் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் மராட்டிய மாநிலத்திற்கு 28,877 கோடி ரூபாயும், பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திற்கு 15 218 கோடி ரூபாயும், பாஜக ஆளும் இன்னொரு மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு 12919 கோடி ரூபாயும், பெங்களூருக்கு 19,236 கோடி ரூபாயும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 2700 கோடி ரூபாய் விடுவிக்காமல் 100 நாள் வேலை திட்டத்தையே ஒழித்துக்கட்ட முனைந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டி வரியின் நிதி பங்கீட்டில் தமிழ்நாடு அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களை நிதி நெருக்கடியில் தள்ளி நிதி தன்னாட்சியை சீர்குலைத்து வரும் மோடி அரசு, மாநில அரசுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 10 ஆவது நிதிக்குழுவில் இருந்த 6.64 சதவீதத்திலிருந்து படிப்படியாக குறைத்து, 15 ஆவது நிதிக்குழுவில் 4.08 சதவீதமாக குறைத்து விட்டது.அதிக வரி அளிக்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசு நிதி பகிர்வில் பச்சைத் துரோகம் இழைத்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

18 வது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி மக்களின் பேராதரவோடு வெற்றி ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. அப்போது மாநிலங்களின் உரிமைகள் காப்பாற்றப்படும்; நிதிப் பகிர்வில் தற்போதுள்ள பாரபட்சமான அணுகுமுறைக்கு முடிவு கட்டப்படும்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories