தமிழ்நாடு

”நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிதியாக ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

”நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை துறைமுக சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில், கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு 2100 கிறிஸ்துவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நீங்கள் என்னை கிறிஸ்துவன் என்று அழைத்தால் நான் கிறிஸ்துவன். இந்து என்று அழைத்தால் நான் இந்து. இஸ்லாமியன் என்று அழைத்தால் இஸ்லாமியன். எனக்கு என்று எந்த ஒரு சாதியோ மதேமோ கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். இதைதான் எங்களுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த இரண்டு மழை வெள்ள பாதிப்புகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து மீள்வதற்கு உடனே நிவாரண நிதி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் ஒன்றிய அரசு வழக்கம் போல் மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது.

நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு ஏமாற்றுகிறது. அதாவது நிதி ஒதுக்கீடு என்று வரும் போது, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு எப்போதும் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. 2015 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களின் போதெல்லாம் மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசு கொடுத்தது வெறும் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் தான். அதாவது நாம் கேட்டதில் இருந்து வெறும் 4.6 சதவீதம் தான் ஒன்றிய அரசு நமக்கு கொடுத்துள்ளது.

தற்போது, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த அதி கனமழை பாதிப்பை தொடர்ந்து தற்காலிக நிவாரண நிதியாக 7 ஆயிரம் கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12 ஆயிரத்து 659 கோடி ரூபாயும் கழக அரசு கேட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்டப் பாதிப்புகளுக்கு அவசர நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் பிரதமரிடம் கோரியுள்ளார்கள். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 700 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. வழக்கமாக பேரிடர் வந்தாலும் வராவிட்டாலும், ஆண்டுதோறும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்கப்படுகிற இரண்டாம் தவணை 450 கோடி ரூபாய் கோடியை மட்டும் தான் ஒன்றிய அரசு விடுவித்தது.

குறிப்பாக, 2021-ல் குஜராத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டது. மறுநாளே அங்கு சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, அம்மாநில அரசுக்கு ரூ.1000 கோடியை ஒன்றிய அரசு சார்பில் அறிவித்தார். மேலும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயை பிரதமர் மோடி வழங்கினார். ஆனால், தமிழ்நாட்டின் இவ்வளவு பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கேட்ட நிதியையும் வழங்கவில்லை. தமிழ்நாட்டின் பக்கம் அவர் எட்டிப்பார்க்கவும் இல்லை. தமிழ்நாட்டிற்கு இந்த எட்டு ஆண்டுகளில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 6000 கோடி ரூபாயைத் தான் ஒன்றிய அரசு தந்திருக்கிறது.

ஆனால், பெரியளவில் பேரிடர் பாதிப்புகளை சந்திக்காத – மக்கள் தொகையில் தமிழ்நாட்டை விட குறைந்த எண்ணிக்கை கொண்ட குஜராத்துக்கு SDRF என்று சொல்லப்படுகிற State Disaster Relief Fund-ல் இருந்து ரூ.8 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கொடுத்துள்ளது. ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திரும்பி வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் கோடியை ஜி.எஸ்.டி-யாக தமிழ்நாடு செலுத்தியிருக்கிறது. நமக்கு இந்த ஆண்டு மொத்தமே 900 கோடி State Disaster Relief Fund-ல் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், 3 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி கட்டிய மத்திய பிரதேசத்துக்கு 1000 கோடி ரூபாய் State Disaster Relief Fund-ல் இருந்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாடு 5 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி கொடுத்துள்ளது. ஆனால், நமக்கு திருப்பி கிடைத்தது வெறும் 2 லட்சம் கோடி ரூபாய் தான். ஆனால், உத்தரபிரதேசம் செலுத்திய வரியே 2 லட்சம் கோடி ரூபாய் தான். ஆனால், அவர்களுக்கு 9 லட்சம் கோடி ரூபாய் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது.இது மட்டுமல்ல, நேற்றுக் கூட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வரிப்பகிர்வு வழங்கியிருக்கிறது.

எவ்வளவு கொடுத்துள்ளார்கள்? உத்தரபிரதேசத்துக்கு 13 ஆயிரம் கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 2 ஆயிரம் கோடி. இந்த பாரபட்சத்தை தான் நாம் கேள்வி கேட்கிறோம். அதிக வரி செலுத்துகிற தமிழ்நாட்டுக்கு தேவையான நிவாரண நிதியை தாருங்கள் என்று தான் கேட்கிறோம். இதைக்கேட்டால், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கோபம் வருகிறது. தர முடியாது என்கிறார். பேரிடரே இல்லை என்கிறார். போதாதற்கு எனக்கு மரியாதை பற்றியும் – பாஷை பற்றியும் பாடம் எடுக்கிறார்" என தெரிவித்தார்

banner

Related Stories

Related Stories