தமிழ்நாடு

“கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவர்களின் உரிமையைக் காப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

கச்சத்தீவை மீட்டெடுத்து, தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவர்களின் உரிமையைக் காப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.8.2023) இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 14,000 பயனாளிகளுக்கு 88 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

“இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் நல மாநாட்டை நடத்த இருப்பதாகவும் – அதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு அவர்களும், அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும், ராஜ கண்ணப்பன் அவர்களும், அதேபோல் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் விடுத்த அன்பான அழைப்பை ஏற்று நான் இங்கே வந்திருக்கிறேன்.

தமிழ்நாடு மாநில தலைமை மீன் வளக் கூட்டுறவு இணையமும், மீனவ சங்கங்களும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறார்கள். பொதுவாக அரசு நிகழ்ச்சிகளில் மீனவ சங்கங்களை இணைத்துக் கொள்ளமாட்டார்கள்.  மீனவர்கள் மாநாடாக இருந்தால், அதில் அரசு அதிகாரிகள் இடம்பெற மாட்டார்கள். ஆனால், இங்கே இரண்டு தரப்பையும் இணைத்து இந்த மாநாட்டை அமைச்சர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

1076 கிலோ மீட்டருக்கு மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலம் நம்முடைய தமிழ்நாடு.  நமது கப்பல்கள் பல்வேறு உலக நாடுகளுக்கு  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சென்றிருப்பதை தாலமியின் நிலவியல் கையேடு சொல்கிறது. 

“கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவர்களின் உரிமையைக் காப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

கட்டுமரம், நாவாய், தோணி, வத்தை, வள்ளம், மிதவை, ஓடம், தெப்பம், டிங்கி, பட்டுவா, வங்கம், அம்பி, திமில் - என்று வகை வகையாக கலம் செலுத்தியவர்கள் தமிழர்கள். நம்மைச் சூழ்ந்துள்ள அனைத்துக் கடல்களிலும் தமிழர்கள் கலம் செலுத்தியிருக்கிறார்கள். உலகப் பயணிகள் எல்லோரும் தமிழ்நாட்டுக் கடலோரத்தை நோக்கி வந்தார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டை உலகத்தோடு இணைத்தது கடல்.  கடல் ஆழமானது மட்டுமல்ல, வளமானது. மீன்பிடி தொழிலில் இந்தியாவில் ஐந்தாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அந்தளவுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்கள் பங்களிக்கிறார்கள்.

“கடல் ஏன் உப்பாக இருக்கிறது? கடல் கடந்து போன தமிழனின் கண்ணீரால்” என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். கடல் கடந்து போன தமிழனின் கண்ணீரால் மட்டுமல்ல – கடலோரத்தில் வாழும் தமிழனின் கண்ணீராலும்தான் உப்பாக இருக்கிறது என்பதை உணர்ந்த நம்முடைய கழக அரசு, தனது ஆட்சிக்காலத்தில் ஏராளமான திட்டங்கள தீட்டி வந்திருக்கிறது.

* மீனவர் நல வாரியம்

* மீன்பிடி தடைக்கால நிவாரணம்

* கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கு மானிய விலையில மண்ணெண்ணெய் வழங்குகிறது போன்றவை கலைஞர் ஆட்சியில்தான் செய்யப்பட்டது.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடந்த இரண்டு வருஷமாக ஏராளமான திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் துறையைக் கவனித்து வரும் நம்முடைய அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் துறை அமைச்சராக மட்டுமல்ல, மீனவ நண்பனாகவே அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த இரண்டு ஆண்டுகாலத்தில் இந்தத் துறையில் மட்டுமே நம்முடைய ஆட்சி செய்திருக்கின்ற சில சாதனைகளை உங்களிடத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். உங்களுக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கும், ஏற்கனவே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள் என்றாலும், ஊடகத்தினர் மற்றும் பொதுமக்களும் தெரிந்திருக்கவேண்டும் என்பதற்காக இதை நான் சொல்ல விரும்புகிறேன்.

“கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவர்களின் உரிமையைக் காப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

* மீன்வளத் துறையின் பெயரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை என்று மாற்றினோம்.

* மீன்பிடி குறைவுக் கால நிவாரணத்தை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, 1 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் இதனைப் பெற்று வருகிறார்கள்.

* தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மீன்வள இளங்கலைப் படிப்பில் மீனவ மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 5 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்தி இருக்கின்றோம்.

* காணாமல் போகும் மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித் தொகையை 250 ரூபாயிலிருந்து 350 ஆக உயர்த்தி வழங்கி வருகிறோம்.

* இயற்கை மரணமடையும் மீனவர் நல வாரிய உறுப்பினர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம்.

* மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு தடுத்திடவும், மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்திடவும், கடல் அரிப்பு தடுப்புச் சுவர்களையும், மீன்பிடி இறங்கு தளங்களையும், தூண்டில் வளைவுகளையும் அமைத்து கொடுத்திருக்கின்றோம்.

*  மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவியாக மீனவக் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் இதனால் பயனடைகிறார்கள்.

* கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். 14 கடலோர மாவட்டங்கள சார்ந்த 2 இலட்சத்து 7 ஆயிரம் மீனவர்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு நிவாரணமாக 62 கோடியே 19 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 

* கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலமாக 2 லட்சம் மீனவ மகளிர் பயன்பெற்று வருகிறார்கள்.

* மீனவர்களுக்கு மிக முக்கியமான தேவை டீசல் எரிபொருள். மீன்பிடி விசைப்படகுகளுக்கு ஆண்டொன்றிற்கு 18,000 லிட்டர்; நாட்டுப் படகுகளுக்கு ஆண்டொன்றிற்கு 4,000 லிட்டர் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசலை நம்முடைய அரசு வழங்கி வருகிறது.  

* அதே போல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுடைய இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. 

* நாட்டுப் படகுகளுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்கு 40 விழுக்காடு மானியமாக வழங்கப்படுகிறது.

* 10 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி நாரிழைப் படகு,  இயந்திரம், வலைகள் மற்றும் பனிக்கட்டி பெட்டி ஆகியவற்றை வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. 

* புதிய தூண்டில் மீன்பிடிப்பு மற்றும் செவுள் வலை சூரை மீன்பிடி படகு கட்டிட 50 விழுக்காடு மானியம் தரப்படுகிறது.

* தமிழ்நாட்டில் கடற்பாசி வளர்ப்பை ஊக்குவிக்க 127 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

* இராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 1,311 மீனவ மகளிருக்கு கடற்பாசி வளர்ப்பு மேற்கொள்ள கடற்பாசி வளர்ப்பு மிதவைகள் மற்றும் கயிறுகளை 1 கோடியே 42 லட்சம் ரூபாய் மானியத்தில் வழங்கியுள்ளது. 

* திருவள்ளூர், இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்களுக்கு கடலில் மிதவை கூண்டுகளை அமைக்க மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. 

* திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கடல் மிதவை கூண்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது.   

* தமிழ்நாட்டில் இறால் வளர்ப்பை ஊக்குவிக்க, மொத்தம் 100 ஹெக்டேர் பரப்பளவுகளில் புதிய இறால் வளர்ப்பு பண்ணைகள் அமைக்க 14 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

* நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குறைந்த அளவு நீர்ப் பயன்பாட்டில் இறால் வளர்ப்பு மேற்கொள்ள ஏதுவாக மொத்தம் 25 உயிர்க்கூழ் இறால் வளர்ப்பு அலகுகள் அமைக்க 4 கோடியே 50 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.   

* மயிலாடுதுறை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு கடல் மீன்குஞ்சு பொரிப்பகம் அமைக்க மொத்தம் 30 இலட்சம் ரூபாய் மானியம் வழங்க அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

* உள்நாட்டு மீன்வளத்தைப் பெருக்க ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

* மீனவ சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெற 6 மாத சிறப்புப் பயிற்சியை நடத்தி இருக்கிறோம்.  இதில் 41 மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

* மீனவ சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள் கடல்சார் படிப்புகளை பயில தமிழ்நாடு அரசு 88 பேருக்கு மொத்தம் 27 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கியிருக்கிறது.

* மீனவ சமுதாயத்தை சார்ந்த 1000 நபர்களுக்கு கடலோர உயிர் பாதுகாப்புப் பயிற்சி 47 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவுகளில் வழங்கப்பட்டிருக்கிறது.

* தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் 9,547 பயனாளிகளுக்கு நிவாரண உதவியாக 12 கோடியே 43 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

* கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 42 மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மொத்தம் 431 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு என்னால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

* 109 மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களின் கீழ் மீன்பிடி துறைமுகங்கள், மீன்பிடி இறங்கு தளங்கள், கடற்கரைப் பாதுகாப்பு, அரசு மீன்பண்ணை கட்டுமானம் மற்றும் அலுவலக கட்டுமானம் போன்ற பணிகள் நடந்து வருகிறது. இதன் மொத்த மதிப்பு 1,296 கோடியே 3 லட்சம் ரூபாய்.

இதுவரை செய்த சாதனைகள் நிறைவேற்றிய திட்டங்களோடு பட்டியலை நான் இப்போது சொன்னேன்.

“கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவர்களின் உரிமையைக் காப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

அடுத்து, இன்றைய தினம் 14 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் 88 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் இந்த விழாவின் மூலமாக கொடுக்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்ல, இங்கே, இத்தனை மீனவர்கள் வந்திருக்கிறீர்கள். இப்படி வந்திருக்கக்கூடிய நேரத்தில், அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் சென்றால் நன்றாக இருக்குமா? அதனால், நமது மீனவர்கள் எதிர்பார்த்து வரும் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்...

முதல் அறிவிப்பு,

* மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு வீடுகளுக்குப் பட்டா வழங்கப்படும்.

2வது அறிவிப்பு,

* 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவுக் கடன் வழங்கப்படும்.

3வது அறிவிப்பு முக்கியமானது,

* மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனி 8 ஆயிரம் ரூபாயாக அது வழங்கப்படும். 

திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில், சொன்ன முக்கியமான அறிவிப்பு இது. இந்த நிவாரணத் தொகையை 1 லட்சத்து 79 ஆயிரம் பேர் பெற இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

அதோடு,

* 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்காலத்துல நிவாரணத் தொகை வழங்கப்படும்.

4வது அறிவிப்பு

* 1000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40 விழுக்காடு மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.

5வது அறிவிப்பு

* தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவானது 3400 லிட்டரிலிருந்து 3700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

6வது அறிவிப்பு

* மானிய விலையில் வழங்கப்படும் டீசல் எண்ணெய் அளவை உயர்த்தி வழங்கவேண்டும் என்று மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டரிலிருந்து 19 ஆயிரம் லிட்டராகவும்,  இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரிலிருந்து
4 ஆயிரத்து 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

7வது அறிவிப்பு

* தங்கச்சிமடம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

* குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த ஆய்வுப் பணிகளையும் தொடங்கி இருக்கிறோம்.

* பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தொடங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

8வது அறிவிப்பு

* மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

* மீன் பிடிக்கையில் காணாமல் போகும் மீனவர்களுக்கு சுழல் நிதி 25 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

9வது அறிவிப்பு

* மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அலகுத் தொகையானது 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

நிறைவாக 10வது அறிவிப்பு

* பல மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தூண்டில் வளைவு அமைக்கப்படவேண்டும் என்று ஒரு கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து கொண்டிருக்கிறது. 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இருக்கின்ற ஒரு வழக்கு காரணமாக இந்த பணிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. இதற்கான கடலோர மேலாண்மை திட்டத்தை விரைவில் வகுத்து, உரிய ஒப்புதலை பெற்று தூண்டில் வளைவுகள் தேவைப்படும் இடங்களில் எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் பணிகளை விரைவில் தொடங்குவோம்.

இதுவரை நான் சொன்ன அறிவிப்புகள் மூலமாக 2 லட்சத்து 77 ஆயிரத்து 347 மீனவர்கள் பயனடைவார்கள். இதற்காக, மொத்தம் 926 கோடியே 88 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் போகிறோம். ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் போகிறோம்.  மீனவர்களுக்கு அடுத்தடுத்து இது வழங்கப்பட இருக்கிறது. இதர கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும். ஏனென்றால், எல்லோரும் சொன்னதுபோல, இது என்னுடைய அரசு மட்டுமல்ல, இது உங்களுடைய அரசு. உங்களுக்காக நடைபெறக்கூடிய அரசு! இது நம்முடைய அரசு! எனவே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

“கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவர்களின் உரிமையைக் காப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

மாநிலத்திற்குள் உள்ள தேவைகளை நாங்கள் நிறைவேற்றுவோம். ஆனால், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள், இன்னமும் பிரச்சினைகளாவே இருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. அந்த கண்டிக்கிற உணர்வை நீங்கள் கரவொலி மூலமாக நீங்கள் எழுப்பவேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இருக்கும் தீராத பிரச்சினையா இது இருக்கிறது.

இலங்கையில் தமிழர்களோட உரிமைப் போராட்டம் எப்போது தொடங்கியதோ, அப்போதிருந்தே, தமிழ்நாட்டு மீனவர்கள தாக்குவதையும் இலங்கை அரசு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது. அதன் பிறகாவது தமிழ்நாட்டு மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க முடியுமா என்றால் அதுவும் இல்லை. அதே தாக்குதல், கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள் தொடரத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக, 2014-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்து. பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பின்னால்தான் அடக்குமுறைகள் இன்னும் அதிகம் ஆகியிருக்கு. கைது, தாக்குதல், சிறைச்சாலைகள் என்பதைத் தாண்டி, மீனவர்களுடைய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள் அந்த படகுகளை இலங்கை அரசாங்கம் பறித்துச் செல்வது அதிகமாக இருக்கிறது.

மீனவர்களை விடுவித்தாலும் படகுகள தருவது இல்லை. மீனவர்களுக்கு வாழ்வாதாரமே படகும், வலையும்தான். படகுகளை உடைப்பதும் - வலைகளை அறுப்பதும் இலங்கை அரசாங்கத்திற்கு வழக்கமாக இருக்கிறது. 'இத்தகைய படகுகள் இலங்கை அரசாங்கத்தின் உடமையாகும்'- என்று அந்த நாட்டின் அதிபரே சொல்லும் அளவுக்கு நிலைமை இப்போது மோசமாகயிருக்கிறது.

“கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவர்களின் உரிமையைக் காப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பாம்பனில் பாஜக சார்பில் ‘கடல் தாமரை’என்ற போராட்டம் நடத்தப்பட்டது. நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். அப்போது, மறைந்த சுஷ்மா சுவராஜ் அவர்கள் இங்கே வந்திருந்தார்கள். ஒன்றியத்தில், பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று அவர் சொன்னார். இந்த 9 ஆண்டு காலத்தில் இது நடந்திருக்கிறதா? 

இதே ராமநாதபுரத்தில்தான் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திரமோடி என்ன பேசினார், “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் துன்புறுத்தப்படுவதும் – கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நடந்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம்”- என்று சொன்னார்.  நாங்கள் கேட்கிறோம், பாஜக ஆட்சியில் இருக்கும் இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படவே இல்லையா?

மீனவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்றால், இந்தியாவில் வலுவான அரசு அமையவேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கின்றேன் என்று குமரிக்கு சென்று, 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் பேசினார் மோடி அவர்கள். சபதத்தை போட்டார். அந்த சபதத்தை நிறைவேற்றி விட்டாரா?

''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்சினை. குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்சினை. இரண்டு மாநில மீனவர்களையும் இணைத்துப் பேசி கூட்டு நடவடிக்கை எடுப்போம்''- என்று சொன்னது யாரு? திரு. நரேந்திர மோடி அவர்கள்.

2014 முதல் தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் இலங்கைக் கடற்படைதாக்குதல் நடத்தலயா? 

2015-ஆம் ஆண்டும் தாக்குதல் நடந்தது. 2016-ஆம் ஆண்டும் தாக்குதல் தொடர்ந்தது. 2017-தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்றும் – இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்கின்ற நிலையிலும் நம் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடருகிறது. ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்கு நான் கடிதம் எழுதிய பிறகுதான் அவர்கள் ஏதோ நடவடிக்கை எடுக்கிறார்கள்.

“கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவர்களின் உரிமையைக் காப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

2020-ஆம் ஆண்டு முதல் இன்று வரை பார்க்கிறோம், தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் இலங்கைக் கடற்படையினர் 48 தாக்குதல் சம்பவங்கள நடத்தியிருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டு மீனவர்கள் 619 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

83 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 604 மீனவர்களையும், 16 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 74 மீனவர்கள் இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அதில் 59 பேரை விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், 67 மீன்பிடி படகுகள் இலங்கையிடம்தான் இன்னமும் இருக்கிறது.

பிரதமர் மோடி ஆட்சியில் தாக்குதல் தொடரவே செய்கிறது என்றால் என்ன அர்த்தம், மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என்று அர்த்தம்?

இந்திய - இலங்கை அமைச்சர்கள் மீனவர்கள் பிரச்னை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுஸ்மா சுவராஜ் அவர்கள். இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் துறை அமைச்சர் மங்கள சமர வீரவும் சந்தித்து பேசினார்கள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மீன்பிடி மீதான கூட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. எந்த வகையிலும் உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதை இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொண்டது. மறுநாள் இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்துனார்கள். இதை ஏற்று இலங்கை செயல்படவில்லை.

“எல்லைக்குள் அத்துமீறக்கூடிய எவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கைக் கடற்படையினருக்கு அதிகாரம் உண்டு” என்று இலங்கை அமைச்சர் சொன்னார். தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கைக்கு நாட்டுடைமை ஆக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்தது.

மோடி அரசு வந்ததும் தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 122 படகுகளையும் நாட்டுடைமை ஆக்கியது இலங்கை அரசு. இப்போதும் கைது தொடருகிறது. படகுகளை தர மறுக்கிறார்கள். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது யார்? பாஜக அரசுதான்.  ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும்போதும் ஒன்றிய அரசின் கவனத்திற்கு நாம் எடுத்துக்காட்டுகிறோம். அவர்களும் இலங்கை அரசுக்கு சொல்லுகிறார்கள். ஆனால், மறுபடியும் கைதும், தாக்குதலும் நடக்கும். இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், அதற்கு கச்சத்தீவு மீட்கப்படவேண்டும். அதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.

“கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவர்களின் உரிமையைக் காப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் அவரிடம் இந்த கோரிக்கையை நான் வைத்திருக்கிறேன். உங்களிடம் கொடுத்திருக்கிறேன். ஏன் கடந்த வாரம் இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது கூட 19.07.2023 அன்று பிரதமருக்கு இது தொடர்பாக நான் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், இங்கே இருக்கக்கூடிய சிலர் என்ன சொல்கிறார்கள், இதற்கெல்லாம் காரணம் திமுக ஆட்சிக்காலத்தில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்று வரலாறு தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

1971-ஆம் ஆண்டு இலங்கை அரசு கச்சத்தீவை சொந்தம் கொண்டாடியதுமே – அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கச்சத்தீவு நம்முடைய அரசுரிமை என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு சட்டப்பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமி அவர்களுக்கு உத்தரவிட்டார். 

கச்சத்தீவானது, இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதற்கான அறிக்கையை 1973 டிசம்பரில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வெளியிட்டார். அதை மீறித்தான் 1974 ஜூன் 26-ஆம் நாள் கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய – இலங்கை பிரதமர்களால் போடப்பட்டது. 

இது ஒப்பந்தம்தானே தவிர சட்டம் அல்ல! நல்லா கவனியுங்கள், அப்படி எந்தச் சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அதைத் திமுகவும் ஆதரிக்கவில்லை. உடனடியாக, டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தி அவர்களை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சந்தித்தார். கச்சத்தீவை தரக்கூடாது என்று வலியுறுத்துனார். 

கச்சத்தீவு நமக்குச் சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்தார். அன்றைய சட்ட அமைச்சர் செ.மாதவன் அவர்களும் முதலமைச்சரோடு உடன் சென்றார்.  சென்னை திரும்பியதும் இதே ஆதாரங்களை வைத்து மறுபடியும் தலைவர் கலைஞர் கடிதம் எழுதினார்.

கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள்கூட அப்படித்தான் சொல்கின்றன. 1954-இல் இலங்கை என்று வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை. கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குப்பகுதிக் கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு தான் இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்குக் கப்பம்கூட கட்டியது கிடையாது. எனவே கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி இந்திய அரசுக்கு கொடுத்ததே நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

“கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவர்களின் உரிமையைக் காப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங், வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் ஆகியோரை சந்தித்து இந்த ஆதாரங்கள முதலமைச்சர் கலைஞர் கொடுத்திருக்கிறார்.

''இலங்கைக்குக் கச்சத்தீவை தாரை வார்த்ததன் மூலமாக இந்தியாவுக்கு அல்ல, தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆபத்து" என்று இதை  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் அவர்கள் நாடாளுமன்றத்தில் முழங்கினார்.

திமுக உறுப்பினராக இருந்த இரா.செழியன் நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். வெளிநடப்பு செய்திருக்கிறார். ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாவது நாளே– அதாவது  29.6.1974  அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கூட்டினார். 

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தாகவேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான். 

அன்று முதல் இன்று வரை ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக செய்கிறார்கள். அது என்னவென்றால், தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வது!

21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் தலைவர் கலைஞர். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக கண்டனக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் நடத்தப்பட்டது. ஜூலை 14-ஆம் தேதி தொடங்கி 45 முக்கிய நகரங்களில் இந்தக் கூட்டங்களை நடத்துவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்தது. 

* தஞ்சையில் கலைஞர், சென்னையில் பேராசிரியர், அப்போது திருப்பெரும்புதூரில் இந்த அடியேன்தான் பேசினேன். இந்த வரலாறு எதுவும் தெரியாமல் மாநில அரசான திமுக இந்தியாவோட ஒரு பகுதியை தாரை வார்த்தது என்று அடிப்படை அறிவும் இல்லாமல், குறைந்தபட்ச நேர்மையும் இல்லாமல், சிலர் பேசி வருவது வெட்கக்கேடானது! கண்டிக்கத்தக்கது!

கச்சத்தீவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மறுப்பதாகும். எனவே இந்திய அரசு, இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.

“கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவர்களின் உரிமையைக் காப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு இப்போதாவது தொடங்கிட வேண்டும். பாஜக அரசு இந்த முயற்சியில் இறங்கவில்லை என்றால், அடுத்து நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கும் புதிய அரசு இதனை நிறைவேற்றும் வகையில் நமது அரசியல் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.

கச்சத்தீவை மீட்டெடுத்து – தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காப்போம்! மீனவர்களின் நலனை காப்பதாக என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கும். எனவே, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அப்படித்தான் செயல்படுவான் என்ற உறுதியை கூறிக் கொண்டு, அதற்கு மீனவ சமுதாயம் எப்போதும்போல எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று என்னுடைய வேண்டுகோளை இந்த நேரத்தில் எடுத்து வைத்து விடை பெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories