
சென்னையில் CNN-News 18 சார்பில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். மேலும் நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
அப்போது, திராவிட மாடல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு "மதச்சார்பின்மை, சோசலிசத்தின் கொள்கைகளை கொண்டு பாசிசத்தை எதிர்ப்பது தான் திராவிட மாடல். இதைவிடத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதுதான் திராவிட மாடல்” என பதில் அளித்தார்.
மேலும், பலமுனைப் போட்டி குறித்த கேள்விக்கு ”பலமுனைப் போட்டி இருக்கலாம். ஆனால், இது பலம் பொருந்திய போட்டியாக இல்லை.” என கூறினார். அதேபோல் ”பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வர வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்றக் கூடாது. இதுவே எங்களுக்குப் பெரிய பிரச்சாரம்தான்.” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து, தேசிய தலைவர் என்ற கருத்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறதே என்று நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு ”என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.






