தமிழ்நாடு

"என் வாழ்வில் மறக்க முடியாதவை ராணி மேரி கல்லூரியும் - கேப்பர் சிறையும்": முதலமைச்சர் நெகிழ்ச்சி பேச்சு!

என் வாழ்வில் மறக்க முடியாதவை ராணி மேரி கல்லூரி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டமளிப்பு விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

"என் வாழ்வில் மறக்க முடியாதவை ராணி மேரி கல்லூரியும் - கேப்பர் சிறையும்": முதலமைச்சர் நெகிழ்ச்சி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.11.2022) இராணி மேரி கல்லூரியின் 104-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-

இந்தியாவில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட மூன்று மகளிர் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீர்களென்றால், முதல் மகளிர் கல்லூரி எது என்று கேட்டால், உங்கள் இராணி மேரிக் கல்லூரிதான். இது 104 ஆவது பட்டமளிப்பு விழா. இந்த நூறாண்டு காலத்தில் எத்தனை லட்சம் மகளிர் பட்டம் பெற்றிருப்பார்கள்! எத்தனை தலைமுறையினருக்குக் கல்வியை - அறிவை - ஆற்றலை - வேலைவாய்ப்பை - தன்னம்பிக்கையை - வாழ்க்கையை இந்தக் கல்லூரி உருவாக்கி இருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது, மலைப்பாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே தான், இந்த இராணி மேரிக் கல்லூரியை வெறும் கல்லூரியாக மட்டும் சொல்ல முடியாது, பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், பெண்குலத்திற்கு ஒளிவிளக்கு என்றுதான் சொல்லவேண்டும்!

இந்தக் கல்லூரிக்கு முன்னால், கடற்கரைப் பகுதியில் கலங்கரை விளக்கு இருக்கிறது. இது பெண்கல்வியின் கலங்கரை விளக்காக இந்த இராணி மேரி கல்லூரி ஒளிவீசிக் கொண்டிருப்பதை நினைவுபடுத்துவது போல் அமைந்திருக்கிறது.

இந்த இராணி மேரி கல்லூரிக்குள் நுழைகிற போது எனக்கு பழைய சில நினைவுகள். எல்லோரும் சொன்னார்கள், அவர்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் என் வாழ்க்கையில், என் வாழ்நாளில் அதை மறக்கவே முடியாது.

பழம்பெரும் பெருமை கொண்டிருக்கக்கூடிய இந்த பெரிய வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய இந்தக் கல்லூரியை இடிப்பதற்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டது. முன்னாள் முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை, அது தேவையும் இல்லை, நான் எப்பொழுதும் அப்படி பேசுவதும் கிடையாது. ஆனால் அன்றைக்கு இந்தக் கல்லூரியை இடிக்கக் கூடாது என்று பொன்முடி சொன்னது போல, சட்டமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம், போரிட்டோம். இங்கு படித்துக் கொண்டிருந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள், பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனுடைய உச்சகட்டமாக, உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்த வளாகத்திற்குள் உட்கார்ந்து மாணவிகளெல்லாம் ஒரு மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்திய காரணத்தால் அன்றைக்கு இருந்த அரசு, கல்லூரிக்குள் வரக்கூடிய குடிநீர் சப்ளையை நிறுத்தியது, கழிப்பறைகளை பயன்படுத்தக்கூட தடையும் போட்டார்கள். கல்லூரியை மூடிவிட்டு, இங்கு பணியாற்றிய பேராசிரியைகளையெல்லாம் வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்தார்கள்.

அப்போது சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. கோபாலபுரத்திலிருந்து தலைவர் கலைஞர் அவர்கள், எங்களுக்கு சட்டமன்ற கட்சியின் அலுவலகத்திற்கு தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டு, ஒரு செய்தியைச் சொன்னார்கள், சட்டமன்றம் முடித்துவிட்டு, வீட்டிற்கு வருகிற வழியிலே, கலைஞர் சொல்கிறார், வீட்டிற்கு வருகிற வழியில், இராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மாணவிகளையெல்லாம் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு வாருங்கள். உங்களுடைய போராட்டத்திற்கு "திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக ஆதரவு தரும்" என்ற செய்தியைச் சொல்லிவிட்டு வாருங்கள்” என்று எங்களுக்கு உத்தரவு போட்டார்.

"என் வாழ்வில் மறக்க முடியாதவை ராணி மேரி கல்லூரியும் - கேப்பர் சிறையும்": முதலமைச்சர் நெகிழ்ச்சி பேச்சு!

அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நானும், பொன்முடி அவர்களும், இன்னும் சிலரும் இங்கே வந்தோம். வந்தவுடன் வாசலில் நிற்கின்ற காவலர்கள், கேட் மூடியிருக்கிறது அப்போது, வாசலில் நிற்கின்ற காவலர்கள், எங்களைப் பார்த்தவுடன் வணக்கம் வைத்து மரியாதையோடு கேட்டை திறந்துவிட்டார்கள். நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும், கேட்டை திறந்து விட்டார்கள். அதற்குப் பிறகு நாங்கள் உள்ளே வருகிறோம். உள்ளே வந்தவுடன் அங்கு கீழே அமர்ந்துகொண்டு ஆயிரக்கணக்கான மாணவியர்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மரியாதையோடு தான் கதவை திறந்துவிட்டார்கள். அப்படி கல்லூரிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய மாணவிகளையெல்லாம் நாங்கள் சந்தித்தோம். அதிக நேரம் கூட இல்லை, இரண்டு முதல் நான்கு நிமிடங்கள்தான் இருக்கும். தைரியமாக இருங்கள், நல்ல காரியத்திற்காக நீங்கள் போராடுகிறீர்கள், உங்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும், நாங்கள் உங்களுக்கு எப்போதும் துணை நிற்போம், கலைஞர் அவர்கள் எங்களுக்கு செய்தி சொல்லி அனுப்பினார், தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களுக்கு சொல்லிவிட்டு வரச்சொன்னார். எனவே, நாங்கள் ஆதரவு தருவோம், நீங்கள் எதற்கும் கலைப்பட வேண்டாம். ஆனால், அமைதியாக போராடுங்கள் என்று சொல்லிவிட்டு நாங்கள் சென்றோம். போகிறபோது கூட கேட் மூடியிருந்தது, அப்போதும் கேட்டை திறந்துவிடுகிறார்கள். வந்தபோதும் கேட்டை திறந்துவிட்டார்கள், போகிறபோதும் காவலர்கள் கேட்டை திறந்து விடுகிறார்கள். வந்து மாணவிகளைச் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு, ஊக்கப்படுத்திவிட்டு, உற்சாகப்படுத்திவிட்டு வெளியில் திரும்ப வருகிறபோதும், மூடியிருந்த கேட் திறக்கப்படுகிறது, நாங்கள் வெளியில் போகிறோம். இது நடந்தது, பகல் 2.00 மணி அல்லது 2.30 மணி இருக்கும்.

இரவு 12.00 மணிக்கு வேளச்சேரியில் இருக்கிறேன், வேளச்சேரியில் தான் என்னுடைய வீடு. போலீஸ் வந்துவிட்டது. எதற்கு என்று கேட்டேன்? கைது செய்ய வந்திருக்கிறோம் என்றார்கள். எதற்கு என்று கேட்டேன்? இராணி மேரி கல்லூரியில் பேராடிக் கொண்டிருக்கின்ற மாணவிகளையெல்லாம் நீங்கள் சுவர் ஏறிக் குதித்து, கேட் ஏறி குதித்து உள்ளே சென்று போய்விட்டு வந்திருக்கிறீர்கள். அதற்காக கைது. வழக்கு என்னவென்றால், கேட் ஏறி குதித்தாக வழக்கு. என்னையும், பொன்முடி போன்றவர்களையெல்லாம் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தார்கள். ஒருமாத காலம் சிறையில் இருந்தோம்.

"என் வாழ்வில் மறக்க முடியாதவை ராணி மேரி கல்லூரியும் - கேப்பர் சிறையும்": முதலமைச்சர் நெகிழ்ச்சி பேச்சு!

இங்கேகூட கல்லூரி முதல்வர் அவர்கள் துன்பப்பட்டார்கள் என்று சொன்னார்கள், துன்பப்படவில்லை, மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டோம். அதை துன்பமாக நாங்கள் கருதவில்லை. உங்களுக்காக, மாணவிகளுக்காக நாங்கள் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டோம். ஒருமாத காலம் இருந்தோம். அதில் எனக்கு என்ன பெருமை என்று கேட்டீர்களென்றால், நான் ஏற்கனவே சொன்னேன், இந்த இடத்திற்கு, இந்தக் கல்லூரி வளாகத்திற்கு "கேப்பர்" என்று பெயர். கடலூரில் கொண்டு போய் எங்களை சிறையில் அடைத்து வைத்தார்களே, அந்தச் சிறைக்கு என்ன பெயர் என்று கேட்டால், கேப்பர் சிறை, எவ்வளவு பொருத்தம் பாருங்கள். எனவே தான் சொன்னேன், என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும், இந்தக் கல்லூரிக்காக போராடிய மாணவிகளுக்குத் துணைநின்றதற்காக, அதை நினைத்துப் பார்க்கின்றபோது, இது ஒரு மறக்கமுடியாத சம்பவமாக என்னைப் பொறுத்தவரையில் அமைந்திருக்கிறது. சிறையில் இருந்து வாடினேன் என்று சொன்னால், நான் வாடவில்லை, மகிழ்ச்சியோடு தான் இருந்தேன். என் வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்த இடம்தான் இந்த இராணி மேரி கல்லூரி என்பதை மீண்டும் மீண்டும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories