தமிழ்நாடு

“திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை.. சட்டத்தை கையில் எடுத்தால் நீதிமன்றம் எதற்கு?” - ஐகோர்ட் காட்டம்!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், நேற்றைய வன்முறை சம்பவம் தொடர்பாக சிறப்பு படை அமைத்து விசாரிக்க டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது.

“திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை.. சட்டத்தை கையில் எடுத்தால் நீதிமன்றம் எதற்கு?” - ஐகோர்ட் காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூரைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ம் வகுப்பு மாணவி, கடந்த 13ம் தேதி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் கலவரமாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை.. சட்டத்தை கையில் எடுத்தால் நீதிமன்றம் எதற்கு?” - ஐகோர்ட் காட்டம்!

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு 49 வது வழக்காக பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதிபதி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் எனவும், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லையா? போராட்டம் நடத்த அனுமதியளித்தது யார்? சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டால் நீதிமன்றம் எதற்கு? மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளீர்கள்.

வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும். பள்ளியில் படிக்கும் 4,500 மாணவர்களின் நிலை என்ன? அவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது கோபத்தில் நடந்த வன்முறையாக தெரியவில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே தெரிகிறது என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

“திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை.. சட்டத்தை கையில் எடுத்தால் நீதிமன்றம் எதற்கு?” - ஐகோர்ட் காட்டம்!

மேலும், அமைதிப்பூங்கா என்ற பெயர் எடுத்த தமிழகத்தில் அந்த நம்பிக்கையை குலைத்து விட்டதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். அதற்கு விளக்கமளித்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, மாணவியின் பெற்றோர் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை எனவும், முன்னாள் மாணவர்கள் வாட்ஸ் ஆப் குழு மூலம் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர் என விளக்கமளித்தார்.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதிடுகையில், ஏற்கனவே வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு விட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்ட நீதிபதி, விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜீலியான ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் கோகுலநாதன் மற்றும் தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குனர் சாந்தகுமாரி அடங்கிய மருத்துவர் குழுவையும் நியமித்து உத்தரவிட்டார்.

“திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை.. சட்டத்தை கையில் எடுத்தால் நீதிமன்றம் எதற்கு?” - ஐகோர்ட் காட்டம்!

இந்த மறு பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மாணவிதின் தந்தை வழக்கறிஞருடன் கலந்து கொள்ளவும் அனுமதித்தார். மறு பிரேத பரிசோதனைக்கு பின், வேறு எந்த பிரச்னையும் செய்யாமல் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு, அமைதியான முறையில் இறுதிச்ச்டங்கு நடத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், அதுகுறித்து விசாரிக்க சிறப்பு படையை உருவாக்க டி.ஜி.பி க்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை குறித்து ஜூலை 29ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.

“திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை.. சட்டத்தை கையில் எடுத்தால் நீதிமன்றம் எதற்கு?” - ஐகோர்ட் காட்டம்!

மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக பேட்டிகள் கொடுக்க கூடாது எனவும், ஊடக விசாரணை மேற்கொள்ள கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது. அதைக் கேட்ட நீதிபதிகள், மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் கல்வி நிறுவனங்களில் நடக்கும் இதுபோன்ற இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், குறைந்தது மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் எனவும், இணை விசாரணை நடத்தும் சமூக ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories