தமிழ்நாடு

"அரசு ஊழியர்கள் மத்தியில் பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன".. நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அறிக்கை

அரசு ஊழியர்கள் மத்தியில் பொய் செய்திகளைப் பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

"அரசு ஊழியர்கள் மத்தியில் பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன".. நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அறிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசு ஊழியர்கள் மத்தியில் பொய் செய்திகளைப் பரப்பி திசை திருப்பும் நோக்கத்தில் சில ஊடகங்களில் செய்து வந்துள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள பதில் அறிக்கை வருமாறு:- சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரும் அனைத்துப் பணியாளர்களும் இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ளனர், இத்திட்டத்தில் 6,02,377 பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இத்திட்டத்தின்படி, பணியாளர்களின் ஊதியத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத் தொகை பணியாளரின் பங்குத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இத்தொகைக்கு நிகரானத் தொகை அரசின் பங்களிப்பாக பணியாளர் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இத்தொகைக்கு உரிய வட்டியை அரசு தொடர்ந்து செலுத்தி வருகிறது. இத்தொகையை 2003-ஆம் ஆண்டிலிருந்து மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) சேர்வதா, இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவாகும்.

அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் வைப்புத்தொகை 31-03-2022 தேதியில் ரூ.53,555.75 கோடியாக உள்ளது. இத்தொகையில் ரூ.41,264.63 கோடி, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) பணத்திரட்சியுடன் கூடிய புதிய குழு ஓய்வூதிய திட்டத்திலும், ரூ.12,000 கோடி பாரத ரிசர்வ் வங்கியின் மூலம் ஒன்றிய அரசின் கருவூல பட்டியல்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு முதல் இந்த முறை தான் செயல்பாட்டில் உள்ளது. அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இருந்த காலங்களிலும் இதை தான் பின்பற்றினார்கள்.

இத்தொகையை தமிழ்நாடு அரசு முற்றிலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக மட்டுமே ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அவர்களின் கணக்கில் அவர்களின் பங்களிப்பு, அரசு பங்களிப்பு, வட்டித் தொகை அனைத்தும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, இதை வேறு எந்த பணிக்கோ, நோக்கத்திற்கோ இதுவரை பயன்படுத்தவில்லை.

இனிவரும் காலங்களிலும் இந்நிதி ஓய்வூதியத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். எதையும் மறைக்காமல், ஒளிவுமறைவுமின்றி இத்தொகை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே கொள்கை விளக்கக் குறிப்பின்மூலம் மாநில சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் வைக்கப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள மாதாந்திர கூட்டுத்தொகைக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் வட்டித் தொகை கணக்கிடப்படுகிறது. தற்போது ஆண்டு வட்டி வீதம் 7.1 சதவீதமாகும். இவ்வட்டி தொகை இத்திட்டத்திலுள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

உண்மைநிலை இவ்வாறு இருக்க, இத்தகைய செய்திகள், அரசு ஊழியர்கள் மத்தியில் பொய் செய்திகளைப் பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories