தமிழ்நாடு

வீட்டில் நிறுத்தியிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நெல்லையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் நிறுத்தியிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைத் தொடர்ந்து மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி நகர்கின்றனர். பல்வேறு பெரும் நிறுவனங்களும் மின்சார பைக், ஸ்கூட்டர், கார்களை தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சமீபகாலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

தமிழ்நாட்டில் கூட வேலூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகள் என இருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி அடிக்கடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்து வருவது தொடர் கதையாக மாறியுள்ளது.

தற்போது நெல்லை மாவட்டம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீபிடித்து எரிந்துள்ளது. கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டேனியல் ஆசீர். மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வரும் இவர் அண்மையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனாலும் தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதையடுத்து அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories