தமிழ்நாடு

“எனது தலைமையிலான திமுக அரசு தோழர்களின் அரசாகத்தான் இருக்கும்”: மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

"தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் தி.மு.க அரசு விளங்கும்!" என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“எனது தலைமையிலான திமுக அரசு தோழர்களின் அரசாகத்தான் இருக்கும்”: மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, மே நாள் வாழ்த்துரை ஆற்றினார்.

அதன் விவரம் வருமாறு: “ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினமாக இருக்கும் மே நாளில் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கித் தரப்பட்டிருக்கும் மே தின நினைவுச் சின்னத்திற்கு மரியாதை செய்யும் வகையில் மலரஞ்சலி செலுத்தி – இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளைத் சொல்லும் ஒரு வாய்ப்பை நான் தொடர்ந்து பெற்று வருகிறேன்.

சிறப்பான இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை நிர்வாகிகள் அனைவருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை - வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக மட்டுமல்ல - தொழிலாளர்களை வாழவைக்கும் அரசாகவும் இன்றைக்கு தி.மு.க. அரசு இருந்து கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே ஏழை, எளிய, பாட்டாளி பெருமக்களுக்காக நடைபெறும் ஆட்சிதான்!

திராவிட முன்னேற்றக் கழகம் முதல்முறையாக பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப்பொறுப்பேற்ற நேரத்தில் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய 'முரசொலி' இதழில் ஒரு கவிதையை வடித்துத் தந்தார்கள்.

''ஏழைக் குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு கட்டில்!

இனி ஏழைக்கு வாழ்வு வந்தது" - என்று பெருமையோடு எழுதிக்காட்டினார்கள்!

பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும் சரி – அதைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்கள் பொறுப்பேற்று நடத்திய ஆட்சியாக இருந்தாலும் சரி, ஏழைகள் - தொழிலாளர் தோழர்கள் மனமகிழ்ச்சியோடு சிரிக்கும் ஆட்சியாகத்தான் இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது.

ஏழைகளுக்காக, தொழிலாளர் தோழர்களுக்காக, பாட்டாளிப் பெருமக்களுக்காக, வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களுக்காக, அறிஞர் அண்ணா தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும், அதைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் நடத்திய ஆட்சியாக இருந்தாலும் எவ்வளவோ திட்டங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு சிலவற்றை மாத்திரம் நான் இங்கு நினைவுப்படுத்த வேண்டியதை என் கடமையாக நான் கருதுகிறேன்.

* குடிசை மாற்று வாரியம் அமைத்து தந்தது தி.மு.க.!

* ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம் அமைத்து தந்ததும் தி.மு.க.!

* நாட்டில் பிச்சைக்காரர்களே இருக்கக்கூடாது என்பதற்காக அவர்கள் தங்கி வாழ்வதற்கு இல்லங்கள் அமைத்து தந்தது. அதேபோல் தொழுநோயாளிகளுக்கு இல்லம் அமைத்து தந்தது தி.மு.க.!

* ஏழைகளுக்கு கண்ணொளி திட்டம் தொடங்கியதும் தி.மு.க.!

* விதவைகள் மறுவாழ்விற்கு நிதி வழங்கியதும் தி.மு.க.!

* தரிசு நிலங்களை ஏழைகளுக்கு வழங்கியதும் தி.மு.க.!

* விவசாய தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க கணபதியா பிள்ளை ஆணையம் அமைத்தது தி.மு.க.!

* நகர்ப்புறத் தொழிலாளர் ஊதியத்தை நிர்ணயம் செய்ய கார்த்திகேயன் ஆணையம் அமைத்ததும் கலைஞருடைய ஆட்சிக் காலத்தில்தான்!

* விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகள் அவர்களுக்கே சொந்தம் ஆக்கித் தந்ததும் தி.மு.க. - குடியிருப்பு மனைச் சட்டம் கொண்டு வந்ததும் தி.மு.க.!

* மனிதனை மனிதனே வைத்து இழுக்கும் கை ரிக்‌ஷாவை ஒழித்து, அதற்கு மாற்றாக சைக்கிள் ரிக்‌ஷாவை அறிமுகப்படுத்தியதும் தி.மு.க.!

* ஊனமுற்றோர் நல்வாழ்வு திட்டம். அவர்களுக்கு ஊனம் என்று சொல்லக்கூடாது - அதற்கு பதிலாக ‘மாற்றுத்திறனாளிகள்‘ என்று அழைக்க வேண்டும் என்ற சட்டத்தை போட்டவரும் கலைஞர் அவர்கள்தான். அவர்களுக்கெனத் தொழிற்சாலைகளை அமைத்துத் தந்ததும் தி.மு.க.!

* பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கருணை இல்லங்கள் அமைத்தவர் கலைஞர்!

* இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும் தி.மு.க.!

* ஏழை, நடுத்தர வகுப்பு மகளிருக்கு இலவசக் கல்வி வழங்கியதும் கலைஞருடைய ஆட்சிக்காலத்தில்தான்!

* ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம் கொண்டு வந்ததும் தி.மு.க.!

* குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் மகளிருக்கு உதவித் திட்டம் கொண்டு வந்ததும் தி.மு.க.!

* மாணவருக்கு இலவசப் பேருந்து பாஸ் வழங்கியதும் தி.மு.க.!

* அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தியதும் தி.மு.க.!

* அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியம் அமைத்ததும் தி.மு.க.!

* உழவர் சந்தைகள் உருவாக்கித் தந்ததும் தி.மு.க.!

* எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றிணைந்து, ஒற்றுமையோடு, ஒருமித்த கருத்தோடு அவர்கள் வாழ வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் பெயரில் சமத்துவபுரங்கள் என்ற ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றித்தந்ததும் தி.மு.க.!

அந்தளவிற்கு ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, ஏழை - எளிய, தொழிலாளத் தோழர்களுக்கான ஆட்சியாக தமிழக ஆட்சியை வடிவமைத்துக் கொடுத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

அந்தப் பாதையில்தான் அவருடைய மகனாக இருக்கும் இந்த ஸ்டாலின் வழிநடத்திக் கொண்டிருக்கிறான் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்த ஓராண்டு காலத்தில் தொழிலாளர் நலனுக்காக எத்தனையோ சிறப்பான திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம் – தீட்டிக் கொண்டிருக்கிறோம் – இன்னும் தீட்டப்போகிறோம்.

என்னுடைய மனதிற்கு நிறைவான பணிகளாக இவை அமைந்திருக்கிறது.

* பணிநேரம் முழுவதும் நின்று கொண்டே பணியாற்றி வரும் தொழிலாளர்களது துயர் துடைக்க இருக்கை வசதியை ஏற்படுத்திக் கொடுத்த அரசு நம்முடைய அரசு.

* அமைப்பு சாரா வாரியத்தில் உறுப்பினராக இருக்கும் 500 மகளிருக்கு ஆட்டோ ரிக்‌ஷா வழங்கிட ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது நம்முடைய ஆட்சி.

* அமைப்பு சாரா வாரியங்களில் உறுப்பினர்களாக இருந்த தொழிலாளர்களுக்குக் கடந்த ஆட்சியில் நிலுவையாக வைக்கப்பட்ட உதவிகள் அனைத்தையும் நிலுவையில்லாமல் வழங்கியதும் இந்த அரசுதான்.

* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தொழிலாளர்களுக்கு விபத்து உதவித் தொகையாக 1 லட்சம் ரூபாய் இருந்ததை 2 லட்சம் ரூபாய் ஆக்கியது தி.மு.க. ஆட்சிதான்.

* கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு மகப்பேறு நலத்திட்ட உதவித் தொகையை 6 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தித் தந்துள்ளது நமது அரசு.

* கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகையாக இதுவரை ஆண்களுக்கு 3 ஆயிரம், மகளிருக்கு 5 ஆயிரம் என இருந்தது. அதனை அனைவருக்கும் 20 ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும் என அறிவித்திருக்கிறோம்.

* 18 அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்களிலும் கடந்த ஓராண்டில் மட்டும் 1,35,660 பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்டங்களின்கீழ் 247 கோடி ரூபாய் மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டுவசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

* 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்த இருக்கிறது.

- இவ்வாறு ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி – அதையெல்லாம் உடனடியாக செயல்படுத்தி கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

ஏனென்றால் 90 ஆண்டுகளுக்கு முன்பே அனைவரும் ஒருவரை ஒருவர் 'தோழர்' என்று அழைக்கவேண்டும் என்று சொன்னவர் நம்முடைய ஈரோட்டுச் சிங்கம் தந்தை பெரியார் அவர்கள்.

1930-ஆம் ஆண்டிலேயே மே தினத்தைக் கொண்டாடியவர் தந்தை பெரியார் அவர்கள். அதற்குப்பிறகு சோவியத் யூனியனுக்குப் பயணம் போய் வந்து லெனின், மாஸ்கோ, ரஷ்யா என்று தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டியவர் பெரியார் அவர்கள். அந்த வழியில்தான் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டினார் தலைவர் கலைஞர் அவர்கள்.

எனது தலைமையிலான நமது அரசு, இது தோழர்களின் அரசாகத்தான் இருக்கும் – தொழிலாளர்களின் அரசாகத்தான் இருக்கும் – தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் அரசாகத்தான் இருக்கும் என்று இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இந்த மே தினப் பூங்காவில் தொழிலாளர்களின் சின்னமாக இருக்கும் இந்த மே தின நினைவுத் சின்னத்தை இங்கு அமைந்திருக்கிறோம் என்றால், இதனை அமைத்துத் தந்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பது உங்களுக்கு தெரியும்.

சட்டமன்றத்தில் அன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த W.R. வரதராஜன் அவர்கள், முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞரிடத்தில் ஒரு கோரிக்கை வைத்தார். மே தினத்தையொட்டி, அந்த மே தினப் பூங்காவில் ஒரு நினைவுச்சின்னம் வைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை வைத்த உடனே, அதை ஏற்றுக்கொண்டவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அவ்வாறு ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, மறுநாளே இந்த இடத்திற்கு வந்து, சுற்றிப்பார்த்து, பார்வையிட்டு எந்த இடத்தில் வைக்கலாம் என்று அதிகாரிகளுடன் கலந்து பேசி, ஆய்வு செய்து உடனடியாக அந்த இடத்தில் வைத்தார்.

அந்தக் கட்டுமானப் பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது, ஏறக்குறைய ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது வருவார். பத்து – பன்னிரண்டு முறை வந்து நேரடியாக பார்த்தார்.

எனவே இது அவரால் கட்டப்பட்டது மட்டுமல்ல, எப்படி இருக்க வேண்டும்? எந்த நிலையில் இருக்க வேண்டும்? எந்த அமைப்பு இருக்க வேண்டும்? என்று அதையும் பார்வையிட்டு, அதற்குப்பிறகு இதைக் கட்டித் தொழிலாளர்களுக்குரிய மரியாதையை இன்றைக்கு அவர் வழங்கி இருக்கிறார். எனவே அவர் வழிநின்று இன்றைக்கு இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் – இந்த ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் நானும் அவர் வழிநின்று தொழிலாளர்களைப் போற்றுவோம்! தொழிலாளர்களின் ஒற்றுமையை ஓங்கச் செய்ய உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்! என்று சொல்லி இங்கு வந்திருக்கும் தொழிலாளர் தோழர்கள் அத்தனைப் பேருக்கும் என்னுடைய மே தின வாழ்த்துகளைச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்” இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories