கோவை மாவட்டம், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகர்ஜுன். இவர் ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்கள் காதலுக்கு இரு வீட்டில் இருந்தும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் காதல் மனைவி மீது நாகர்ஜுன் சந்தேகம் அடைந்துள்ளார்.
இதையடுத்து சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நாகர்ஜுன் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் அப்போது தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது போதையில் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு போலிஸார் அவரது வீட்டிற்கு சென்று மனைவி ஷர்மளாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து நாகர்ஜுனனை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.