
உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கட்டணமில்லா அழைப்பு எண் 104 மையத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இருந்து உக்ரைன் சென்று படித்த மாணவர்கள் அங்கு இருக்கும் போர் பதற்ற சூழல் காரணமாக திரும்பி வந்துள்ளனர்.
இதுவரை 1,456 மாணவர்கள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர் எனவும் அவர்கள் கல்வி பாதிக்காத வகையில் உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. அவர்களுக்கு மனநல ஆலோசனை என்பது தேவைப்படுகிறது என கூறினார்.
மேலும் இன்று சுகாதாரத்துறைக்கு மற்றொரு புதிய திட்டத்திற்கான ஆலோசனை ஒன்று நடத்தி இருக்கிறோம் எனவும் சுகாதார உரிமைக்கான சட்ட முன்வடிவு தயாரிக்க ஆலோசனை நடைபெற்றது என்று தெரிவித்தார்.
அனைத்து தரப்பினருக்கும் தேவையான சுகாதார கட்டமைப்பு, அவர்களை காப்பாற்றுவதுதான் இதன் நோக்கம் எனவும், தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது.
அசாமில் இந்த திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறினார். நடப்பு பட்ஜெட்டில் அமல்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு தமிழகத்தில் அமல் படுத்தப்படும்.








