
கோவை மாவட்டம், செட்டிக்கா பாளையத்தைச் சேர்ந்தவர் தேவசித்து. இவரது மனைவி கிரேஷி அம்மாள். இந்த தம்பதிக்கு ஜாக்குலின் என்ற ஒரு மகள் இருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு ஜாக்குலின் தங்களுக்குச் சொந்தமான மளிகைக் கடையிலிருந்து ஒரு பாக்கெட் நூடுல்ஸ் மற்றும் சில கேரட்டுகளை எடுத்துச் சமைத்துள்ளார். அப்போது ஒரு கேரட் எடுத்து சாப்பிட்டபோது அவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் கிரேஷி அம்மாள் உடனே மகளை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியின் நிலை கவலைக்கிடமா இருப்பதாகக் கூறி அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இங்கு மாணவியைப் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைகேட்டு அவரது பெற்றோர் கதறியழுதது அங்கிருந்தவர்களை வேதனையடையச் செய்தது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மளிகைக் கடையில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் கேரட்டில் விஷ மருந்து வெளித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த கேரட்டை தவறுதலாக ஜாக்குலின் எடுத்து சாப்பிட்டதால் அவர் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எலிக்காக வைக்கப்பட்டிருந்த கேரட்டை எடுத்து சாப்பிட்டதில் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








