தமிழ்நாடு

“குடல் அப்பளம், வடகம் சாப்பிட்டால் புற்றுநோய்?” : தொடர் ஆய்வுக்கு உத்தரவிட்ட தமிழக அரசு!

குடல் அப்பளம், வடகம் வத்தல் ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

“குடல் அப்பளம், வடகம் சாப்பிட்டால் புற்றுநோய்?” : தொடர் ஆய்வுக்கு உத்தரவிட்ட தமிழக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம் வத்தல் ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உட்கொள்ளும் நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வரப் பெற்றுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 மற்றும் ஒழுங்குமுறைகள், 2011-ன் படி குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றின் தரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மேற்படி குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றில் Carmoisine, Tartrazine, Sunset yellow, Ponceau 4R உள்ளிட்ட பல நிறமிகள் (DYES) சேர்க்கப்படுகின்றன. இவை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவும், அனுமதிக்கப்படாத நிறமிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், தரமற்ற, நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிற்றுபுண், புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

குடல் அப்பளம், வடகம், வத்தல் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மேலும், வடகம், வத்தல் தயாரிக்கும் அனைத்து தயாரிப்பாளர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் – 2011-இல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உத்தரவுப்படி, அப்பளம், வடகம், வத்தல் தயாரிக்கும் அனைத்து உணவு வணிக நிறுவனங்களும், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் பொழுதும், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் நுகர்வோருக்கு வழங்கப்படும் ரசீதுகளில் தங்களுடைய உணவு பாதுகாப்பு உரிம எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும், கடைகளில் விற்பனை செய்யப்படும் குடல் அப்பளம், வடகம், வத்தல் பொட்டலங்களின் மீதுள்ள லேபிள்களில் உணவு பாதுகாப்பு துறையின் உரிம எண், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முழுமையான முகவரி, நிகர எடை, லாட் / கோடு / பேட்ஜ் எண், தயாரிப்பு தேதி, பயன்படுத்த கூடிய கால அளவு, Nutritional Information ஆகியவை குறித்த விபரங்கள் இடம் பெற வேண்டும். எனவே, பொதுமக்கள் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை கடைகளில் வாங்கும் பொழுது மேற்குறிப்பிட்ட விபரங்கள் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும்.

உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகிய 434 உணவு மாதிரிகள் பாகுப்பாய்வு செய்யப்பட்டு 56 உணவு மாதிரிகள் தரமானது எனவும், 301 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றது எனவும், 77 உணவு மாதிரிகள் தரம் குறைவானது மற்றும் தப்புக் குறியிடப்பட்டது எனவும் அறிக்கை பெறப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பற்றது என அறிக்கை பெறப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உற்பத்தி செய்த தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006-ன் படி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 99 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.14,60,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தரம் குறைவானது மற்றும் தவறான குறியிடப்பட்டது என அறிக்கை பெறப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உற்பத்தி செய்த தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீது மாவட்ட நீதி வழியில் தீர்ப்பு வழங்கும் அலுவலர் (Adjudicating Officer) நீதிமன்றத்தில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 54 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.7,49,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அனைத்து விற்பனை கடைகளிலும் தொடர் ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை எளிதில் கவரும் நோக்கில் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவை பல வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. போதிய விழிப்புணர்வின்றி இவ்வாறு நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிற்றுபுண் மற்றும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இவற்றினை தவிர்த்து ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ளலாம். மேற்படி குடல் அப்பளம், வடகம், வத்தல் மற்றும் பிற உணவுப் பொருட்களில் உள்ள தரம் பற்றிய குறைபாடு குறித்து 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் செய்யலாம். மேலும் unavupugar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories