
வடசென்னை ராயபுரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்னை மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இத்தகைய பிரம்மாண்டமான அரசு மருத்துவமனையில், தற்போது ஒரே படுக்கையில் நான்கு நோயாளிகளை அமர வைத்து சிகிச்சை அளிக்கும் அவலக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஸ்டான்லி மருத்துவமனையில் Red Block மற்றும் Yellow Block என இரண்டு அவசரச் சிகிச்சைப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், Red Block எனப்படும் அதி அவசரச் சிகிச்சைப்பிரிவில் தற்போது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, அந்தப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அனைவரும் அவசரமாக Yellow Block அவசரச் சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திடீரென நோயாளிகள் மாற்றப்பட்டதால் அங்கு கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெறும் 30 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ள அந்தப் பிரிவில், 120-க்கும் மேற்பட்ட நோயாளிகள் குவிந்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி, ஒரே படுக்கையில் நான்கு நோயாளிகளை அமர வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவலச் சூழல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வது அவசியமானதுதான். ஆனால், மாற்றுப் பிரிவில் நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை உள்ளிட்ட முறையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்த பின்னரே இப்பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல், இடவசதி இல்லாத சிறிய அறையில் நோயாளிகளைத் திணிப்பது அவர்களின் உயிரோடு விளையாடுவதற்குச் சமம்" என்று நோயாளிகளின் உறவினர்கள் மிகுந்த வேதனையுடன் குற்றம் சாட்டியுள்ளனர்.






