
முரசொலி தலையங்கம்
14.07.2026
விஜய் செய்த களவாணிதனங்கள் !
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டுக் களவாணிகள் என்று தரங்கெட்டுவிமர்சனம் செய்துள்ளார் முதலமைச்சர் விஜய். அவர் பயன்படுத்தும் சொற்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியுமா? அல்லது டயலாக் பேப்பரைப் போலவே புரியாமல் பேசுகிறாரா?
தேர்தலுக்கு முன்னதாகவே தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் சில அல்லக்கைகளைப் பிடித்து தனக்கு ஆதரவாக மாற்றி வைத்திருந்தாரே விஜய், அதுதான் களவாணித்தனம். தேர்தல் முடிந்த நாளிலேயே அந்தப் பச்சோந்திகள் நிறம் மாறி, தங்கள் குணத்தை காட்டியதே அதற்குப் பெயர்தான் களவாணித்தனம்.
தி.மு.க. கூட்டணியில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகிய கட்சிகளோடு அறிவிக்கப்படாத பேச்சுவார்த்தையை விஜய் கட்சி நிர்வாகிகள் நடத்தினார்களே. இதுதான் களவாணித்தனம்.
அ.தி.மு.க.கூட்டணியில் நின்று வென்ற அ.ம.மு.க. சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் நடத்தினார்களே. அதுதான் களவாணித்தனம் என்பது. அவரை முகத்தை மூடி அழைத்துச் சென்றதற்கு உண்மையான அர்த்தம்தான் களவாணித்தனம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அதிகாரப் பூர்வமாக தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு முன்னதாகவே, ஆளுநருக்கு கொடுத்த கடிதத்தில் முஸ்லிம் லீக் ஆதரவு என்று விஜய் கட்சி சொன்னதே களவாணித்தனம்.
‘யார் யாரிடம் எல்லாம் பேசினார்கள், என்பதை நான் சொல்லவா?' என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்ன போது, அவருக்கு எதிர் பதில் சொல்லாமல் இருக்கிறார்களே. அதுதான் களவாணித்தனம்.

அ.தி.மு.க. எம். எல்.ஏ. லீமா ரோஸ், 'அ.தி.மு.க. வும் விஜய் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்' என்று சொன்னாரே. அதுதான் களவாணித்தனத்தின் உச்சம். மே 4 ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வந்தது. மே 5 ஆம் தேதி லீமா ரோஸ் இப்படி பேட்டி தந்தார். ஆட்சி அமைக்கும் வலிமை இல்லாத நிலையில் அ.தி.மு.க.வின் ஆதரவைப் பெறுவதற்கும் விஜய் முயற்சி செய்கிறார் என்பதை வெளிப்படையாக உடைத்தவர் லீமா ரோஸ். 'லாட்டரி'களால் உருவாக்கப்பட்டதுதான் விஜய் கட்சி என்பது ஊருக்குத் தெரிந்த உண்மை ஆகும்.
களவாணித்தனத்தின் உச்சமாக அ.தி.மு.க.வின் ஆதரவுடன் முதலமைச்சர் ஆகத் துடித்தார் விஜய். அதனை அ.தி.மு.க. தலைமை ஏற்கவில்லை என்றதும்தான் அ.தி.மு.க.வை உடைக்கத் திட்டமிட்டார் விஜய். இதனை ‘கன்னக்கோல்' வைப்பது என்பார்கள். வீடுகளின் சுவர்களைத் துளையிட அல்லது சுரங்க வழி ஏற்படுத்த திருடர்கள் பயன்படுத்தும் சிறிய இரும்புக் கம்பியை பயன்படுத்துவார்கள். அந்த மாதிரி அ.தி.மு.க. அலுவலகத்தில் கன்னக்கோல் வைத்தார் விஜய்.
அதனை அ.தி.மு.க. தலைமை ஏற்கவில்லை என்றதும்தான் அ.தி.மு.க.வை உடைக்கத் திட்டமிட்டார் விஜய். இதனை ‘கன்னக்கோல்' வைப்பது என்பார்கள். வீடுகளின் சுவர்களைத் துளையிட அல்லது சுரங்க வழி ஏற்படுத்த திருடர்கள் பயன்படுத்தும் சிறிய இரும்புக் கம்பியை பயன்படுத்துவார்கள். அந்த மாதிரி அ.தி.மு.க. அலுவலகத்தில் கன்னக்கோல் வைத்தார் விஜய்.
'8 பேருக்கு அமைச்சர் பதவி தருகிறேன்' என்றார். '10 பேருக்கு வாரியம் தருகிறேன்' என்றார்கள். இப்படித் திரட்டப்பட்டவர்கள்தான் அ.தி.மு.க.வின் 25 உறுப்பினர்கள். இவர்கள் வாக்களித்ததால்தான் விஜய் கட்சிக்கு 144 உறுப்பினர் ஆதரவு எனப் பதிவானது. இது விஜய் நடத்திய கன்னக்கோல் களவாணித்தனத்தின் உச்சம். இத்தகையஎம்.எல்.ஏ. திருட்டைச் செய்தவர்தான் விஜய். இவருக்கு அ.தி.மு.க.வைபேசுவதற்கு யோக்கியதை இருக்கிறதா?
தன்னுடைய களவாணித்தனத்துக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களைப் பயன்படுத்திய விஜய்க்கு எதைப் பற்றி பேசுவதற்கும் யோக்கியதை இல்லை.

கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்களுக்குப் பதவி போய்விடும். அதிலும் அமைச்சர் பதவியை ஏற்றால் நிச்சயம் பதவி போய்விடும் என்பதால் அவர்களுக்கு நினைத்த மாதிரி பதவிகள் கொடுக்க முடியவில்லை. அவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கே வந்துவிட்டார்கள்.
இத்தோடு முடியவில்லை விஜய்யின் களவாணித்தனங்கள். அ.தி.மு.க. உறுப்பினர்களை ஒவ்வொருவராக பதவி விலக வைத்தார் விஜய். இதுவரை ஆறு பேர் விஜய்யால் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார்கள். இவை அனைத்தும் அ.தி.மு.க.வுக்குள் கன்னக்கோல் வைத்து விஜய் செய்து வரும் செயல்கள்தான். இந்த ஆறு பேரும் விசிலில் நிற்பார்களாம். கண்ணை மூடித் திறப்பதற்குள் ஜெயித்துவிடுவார்களாம். விஜய் கட்சி நடத்தவில்லை. கண்கட்டி வித்தை காட்டிக் கொண்டு இருக்கிறார்.
தனது நாற்காலிக்கு உள்ளே வந்து முட்டுக் கொடுக்கும், வெளியில் நின்று முட்டுக் கொடுக்கும் கட்சிகளை விஜய் நம்பத் தயாராக இல்லை. 'தான் திருடி, பிறரை நம்பாள்' என்பது பழமொழி. அதனால் தான், இவர்கள் தயவு இல்லாமல் ஆட்சி நடத்துவதற்காக அ.தி.மு.க.வுக்குள் கன்னக்கோல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தே வருகிறார்.
விஜய்யை நம்பி ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புத் தரப்படப் போவதுமில்லை. 'இவை அனைத்தும் குதிரை பேரங்கள்' என்பதால் தேர்தல் நடக்கவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
களவாணித்தனத்தால் ஆட்சி நடத்தி, அதையே தொடர்ந்து வரும் விஜய், தன்னைப் போலவே மற்றவர்களையும் நினைக்கிறார். வெட்கம்! வெட்கம்!!






